Sunday, July 31, 2016

228. - தலைவி கூற்று

228. - தலைவி கூற்று

பாடியவர்: செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.  சங்க காலத்தில், அரசாங்கத்தின் செய்திகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் பணியினைச் செய்தவர்கள் வள்ளுவர் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, இவர் அத்தகைய பணியைச் செய்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: ’கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நடத்துகிறார்கள். தலைவியைக் காணத் தோழி வருகிறாள். திருமணத்திற்குமுன் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதும் அந்தப் பிரிவிவின் பொழுது தலைவி பொறுமையாக இருந்ததும் தோழிக்கு நினைவிற்கு வருகிறது. “திருமணத்திற்குமுன் நீ உன் தலைவைனைவிட்டுப் பிரிந்திருந்த பொழுது, உன்னால்  வருத்தப்படாமல் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது?” என்று தோழி கேட்கிறாள். அதற்குத் தலைவி, “ அவர் வெகு தொலைவில் இருந்தாலும் அவர் நாட்டிலிருந்து கடல் அலைகள் என் சிற்றூருக்கு வந்தன. அது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அதனால், நான் பொறுமையாக இருக்க முடிந்ததுஎன்று மறுமொழி அளிக்கிறாள்.


வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. 

கொண்டு கூட்டு: நம் துறந்து நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும், நெஞ்சிற்கு அணியர் தண்கடல் நாட்டு வீழ்தாழ் தாழை ஊழ்உறு கொழுமுகை குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரைவந்து பெயரும் என்ப

அருஞ்சொற்பொருள்: வீழ் = விழுது; ஊழ்உறு = முற்றிய; கொழுமுகை = வளமான மொட்டு ; குருகு = நாரை; உளர் = கோதுதல்; விரிபு = விரிந்து; தோடு = மடல்; கானல் = கடர்கரைச் சோலை; நண்ணிய = அருகில் உள்ள; முன்றில் = முற்றம்; சேண் = தொலை; அணியர் = அருகில் உள்ளவர்.


உரை: தோழி!  நம் தலைவர் நம்மைப் பிரிந்துசென்று, வெகு தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், அவர் என் நெஞ்சிற்கு மிக அருகிலேயே இருந்தார். அவர் இருந்தகுளிர்ந்த  கடலையுடைய நாட்டிலிருந்து, விழுதுகள் தொங்கும் தாழையின், முதிர்ந்த, வளமான மொட்டுகள், நாரைகள் கோதுகின்ற சிறகைப் போல, விரிந்து மடல்களாக மலர்கின்ற, கடற்கரைச் சோலைக்கு அருகில் உள்ள நமது  சிற்றூரின் முன்னிடத்தில், அலைகள் வந்து திரும்பிச் செல்லும் என்பர்.

No comments:

Post a Comment