Sunday, July 17, 2016

221. தலைவி கூற்று

221.  தலைவி கூற்று

பாடியவர்: உறையூர் முதுகொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்கள் ( 221, 390) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும்என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “ முல்லை மலர்ந்தது; கார்காலமும் வந்துவிட்டது. நான் எவ்வாறு பொறுமையாக இருப்பேன்என்று கூறுகிறாள்.

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே. 

கொண்டு கூட்டு: முல்லையும் பூத்தனபறியுடைக் கையர், மறிஇனத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே. அவரோ வாரார்!

அருஞ்சொற்பொருள்: பறி = பனை ஓலைக் குடை; மறி =  குட்டி; ஒழிய = தங்க; கூழ் = உணவு; சென்னி = தலை; முகை = மொட்டு; பசுமுகை = புதிய மொட்டு.

உரை: முல்லைப் பூக்கள் மலர்ந்தன; பனை ஓலையால் செய்த குடையைக் கையில் வைத்துள்ள இடையர்கள்,  குட்டிகளோடு கூடிய ஆட்டு மத்தையோடு சென்று தங்குவதற்காக, பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பிச்  செல்கின்றார்கள். அவர்கள் தம் தலையில் அணிந்து கொண்டன யாவும், முல்லையின் அரும்புகளே ஆகும்; ஆனால், தலைவரோ இன்னும் வரவில்லை.


சிறப்புக் குறிப்பு: ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் மாலையில் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்று இரவு நேரத்தில் ஆட்டு மந்தையுடன் தங்குவது வழக்கம்.

No comments:

Post a Comment