Monday, September 12, 2016

251. தோழி கூற்று

251. தோழி கூற்று

பாடியவர்: இடைக்காடனார். இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரைப் பெற்றார் என்று சிலர் கூறுவர்வேறு சிலர், இடைக்காடன் என்பது இவர் இயற்பெயர் என்றும் கூறுவர்இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களையும் (139, 194, 274, 284, 304, 474), நற்றிணையில் மூன்று செய்யுட்களையும் (142, 221, 316) குறுந்தொகையில் ஒருசெய்யுளையும் ( 251), புறநானூற்றில் ஒரு செய்யுளையும் (42)  இயற்றியுள்ளார்இவர் பாடல்கள் இலக்கிய வளமும் உவமை நயமும் மிகுந்தவை.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடைத் தோழி, "பருவமன்று; பட்டது (தோன்றியது) வம்பு" என்று வற்புறுத்தியது.    (வம்பு புதுமை. இங்கு, காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழையைக் குறிக்கிறது.)
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறித் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றான். கார்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள். “இது கார்காலம் அன்று. இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று உறுதியாகக் கூறித் தோழி தலைவிக்குஆறுதல் அளிக்கிறாள்.

மடவ வாழி மஞ்ஞை மாயினம்
கால மாரி பெய்தென அதனெதிர்
ஆலலு மாலின பிடவும் பூத்தன
காரன் றிகுளை தீர்கநின் படரே
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர்
புதுநீர் கொளீஇய வுகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. 

 கொண்டு கூட்டு: இகுளை! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்புதுநீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டு, மஞ்ஞை மாயினம் காலம் மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தனமடவகார் அன்று; தீர்க நின் படர்வாழி!
அருஞ்சொற்பொருள்: மடவ = அறிவில்லாதவை; மஞ்ஞை = மயில்; மா = பெரிய; இனம் = கூட்டம்; மாரி = மழை; ஆலுதல் = ஆடுதல்; ஆலின = ஆடின; பிடவு = ஒரு வகைப் பூ ; கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி); இகுளை = தோழி; படர் = துன்பம்; கொளீஇய = கொள்ளும் பொருட்டு; உகுத்தல் = பெய்தல்; நொதுமல்  = தொடர்பில்லாத; வானம் = மேகம்நொதுமல் வானம் = பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் தொடர்பில்லாத காலத்தில் மழை பெய்யும் மேகம்.
உரை: தோழி! சென்ற கார்காலத்தில் பெய்ய வேண்டிய மழையில், பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரைக் கொட்டிவிட்டுப், புதிய நீரைக் கடலிலிருந்து முகந்து கொள்வதற்காக, இப்பொழுது, தொடர்பில்லாத காலத்தில் மேகங்கள் செய்யும் முழக்கத்தைக் கேட்டு, மயில்களின் பெரிய கூட்டம், பருவத்துக்குரிய மழை பெய்யப் போகிறது என்று தவறாக எண்ணி, அம் மழையைக் குறித்து ஆடுகின்றன; பிடவும் மலர்ந்தன; அவை அறியாமையை உடையன; இது கார்காலம் அன்று; ஆதலின்; உன் துன்பத்தை விடுவாயாக.
.
சிறப்புக் குறிப்பு: இது கார்காலம் என்று தோழிக்கு நன்கு தெரிந்திருந்தாலும், தலைவியை ஆற்றுவிப்பதற்காக, அவள்இது கார்காலம் அன்று.” என்று பொய் சொல்லுகிறாள். தோழியின் செயல்,

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.                             (குறள் – 292)

(பொருள்: குற்றமற்ற நன்மை பயக்குமானால், பொய்ம்மையான பேச்சும் வாய்மையைப் போன்றதாகவே கருதப்படும்.)


என்ற குறளை ஒத்திருக்கிறது

No comments:

Post a Comment