Sunday, August 14, 2016

236. தோழி கூற்று

236. தோழி கூற்று

பாடியவர்: நரிவெரூஉத் தலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 5 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிவான், ‘இவள் வேறு படாமைஆற்றுவிஎன்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தான். ”நான் திரும்பி வரும்வரை, தலைவிக்கு ஆறுதலாக இருஎன்று தோழியை வேண்டுகிறான். அவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதைத் தோழி விரும்பவில்லை. ஆகவே, தோழி, “நீ அவளைப் பிரிந்து செல்வதானல் அவளை நீ முற்றிலும் கைவிட்டுவிட்டாய் என்று பொருள். நீ அவ்வாறு செல்லுவதற்கு உடன்பட்டால், நீ நுகர்ந்த என் நலனைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்வாயாகஎன்று கூறுகிறாள்.

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. 

கொண்டு கூட்டு:
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை  நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் தண்கடற் சேர்ப்ப, விட்டென விடுக்குநாள் வருக. அதுநீ நேர்ந்தனையாயின், நீ உண்ட என் நலனே  தந்தனை சென்மோ!

அருஞ்சொற்பொருள்: நேர்தல் = சம்மதித்தல்; தந்தனை = தந்து (திருப்பித் தந்துவிட்டு); சென்மோ = செல்வாயாக; குவவுதல் = குவிதல்; அடைகரை = மணல் அடைந்த கடற்கரை; சினை = கிளை; படுசினை = நிலத்தைத் தொடும் அளவுக்குத் தாழ்ந்த கிளை; வம்பு = புதுமை; வம்பநாரை = புதிதாக வந்த நாரை; சேக்கும் = தங்கும்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; நலன் = அழகு, கற்பு ஆகியவற்றைக் குறிக்கும் சொல்.

உரை:  குன்றைப்போல், குவிந்து கிடக்கும் மணல் அடைந்த கடற்கரையில் வளர்ந்து, நிலத்தைத் தொடும் அளவுக்குத் தாழ்ந்து நின்ற புன்னை மரத்தின் கிளையில், புதிய நாரை வந்து தங்கும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! இப்பொழுது நீ சென்றால், நீ இவளைக் கைவிட்டுவிட்டாய் என்ற எண்ணத்தோடு செல்க; உன் பணிகளிலிருந்து உனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்குமோ (அதாவது, எப்பொழுது வரமுடியுமோ) அப்பொழுது நீ வருக. அத்தகைய பிரிவுக்கு நீ உடன்பட்டால். நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தைத் திருப்பித் தந்துவிட்டுச் செல்வாயாக.

சிறப்புக் குறிப்பு: தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், தலைவியின் நலனைத் தன் நலன் என்று தோழி குறிப்பிடுகிறாள். இவ்வாறு குறிப்பிடுவது வழக்கிலிருந்ததாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

          தாயத்தின் அடையா ஈயச் செல்லா
            வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா
            ”எம்என வரூஉம் கிழமைத் தோற்றம்
            அல்ல ஆயினும் புல்லுவ உளவே.
                                                (தொல்காப்பியம், பொருளியல்  - 27)
பொருள்: (தாயம் = உரிமை; வீறு = வெற்றி; கிழமை = உரிமை; புல்லும் = பொருந்தும்) முன்னோர் சேர்த்துவைத்த  சொத்தைப் போல உரிமையால் அடைய முடியாததாய், கொடுத்துப் பெற இயலாததாய், தொழில் முறையால் வந்தடையாததாய்,
எவராலும், வெற்றி கொள்ள முடியாததாய், “எம்முடையதுஎனக்குரியதுஎன்று உரிமை கொண்டாடும்படியான தலைவியின் மேனி வனப்பு தோழியது அல்லவாயினும், அவளுக்கும் பொருந்தும்படிச் சொல்லும் வழக்குகள் உண்டுஉதாரணமாக, ”தலைவியின் அழகு முதலியவற்றைத் தன்னுடையது போலச் சொல்லும் கூற்றுக்கள் பலவுள. தலைவிக்காகப் பேசும் அவள், ‘என் அழகைத் திரும்பித் தா’, ‘என் தோளை மெலிய வைத்தனைஎன இவ்வாறு பேசுவாள்என்று முனைவர் தமிழண்ணல் தம் நூலில் குறிப்பிடுகிறார்.


மருத நிலத்திற்கு உரிய கருப்பொருளாகிய நாரை, நெய்தல் நிலத்திற்குப் புதிதாக வந்து, அங்குள்ள மீன்களை உண்டு, புன்னைமரத்தின் கிளையில் தங்கி இருக்கிறது. அதுபோல், தலைவி இருக்கும் ஊருக்குப் புதிதாக வந்து,  தலைவன் தலைவியின் நலனை நுகர்ந்தான். ஆனால், நாரை தான் மீன்களை உண்ட இடத்தில் தங்கி இருப்பதைப் போல், அவன் தலைவியின் ஊரில் தங்கி அவளை மகிழ்விக்காமல், பிரிந்து செல்ல நினைக்கிறான்.  ”நாரைக்கு உள்ள பண்புகூட உன்னிடம் இல்லையேஎன்று தோழி தலைவனைக் கடிந்து கொள்வதை, இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம்.

235. தலைவன் கூற்று

235. தலைவன் கூற்று

பாடியவர்: மாயேண்டனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: வரையாது பிரிந்து வருவான் (வருவான் - மீண்டு வரும் தலைவன்) வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன், தான் தேடிச் சென்ற பொருளைப் பெற்றுத் திரும்பிவருகிறான். வரும் வழியில் தலைவியின் ஊர் அவன் கண்களில் படுகிறது. அவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், இப்பொழுது கார்காலம் முடிந்து குளிர்காலம் வந்தது. குளிர்காலம் வந்ததால் வாடைக்கற்று வீசுகிறது. தன்னைப் பிரிந்திருக்கும் தலைவி, வாடைக் காற்றினால் வருந்துவாள் என்பது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. ஆகவே, ”என் தலைவியை வருத்தாமல் பாதுகாப்பாயாகஎன்று வடைக்காற்றை வேண்டுகிறான். இப்பாடலைத் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்ததாகக் கருதாமல், வாடைக் காற்றை நோக்கிக் கூறியதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. 

கொண்டு கூட்டு:
வாடை! நெல்லி மரையினம் ஆரும் முன்றில் புல்வேய் குரம்பை நல்லோள் ஊர்பாம்பின் தூங்குதோல் கடுக்கும் தூவெள் அருவிக் கல் உயர் நண்ணியது. ஓம்புமதி! வாழியோ!

அருஞ்சொற்பொருள்: ஓம்புதல் = பாதுகாத்தல்; தூங்கும் = தொங்கும்; கடுத்தல் = ஒத்தல்; கல் = மலை; நண்ணியது = அருகில் உள்ளது; மரை = ஒரு வகை மான்; ஆரும் = உண்ணும்; முன்றில் = முற்றம்; குரம்பை = குடிசை.


உரை: வாடைக் காற்றே! நெல்லிக்காயை, மரை என்னும் மானினம் உண்ணுகின்ற முற்றத்தை உடைய, புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய,  நல்ல தலைவியின் ஊர், பாம்பு உரித்த தோல் தொங்குவதைப் போல் விழும்  தூய வெண்மையான அருவியை உடைய, மலை  உச்சிக்கு அருகில்  உள்ளது. அங்கே உள்ள என் தலைவியை நீ பாதுகாப்பாயாக! நீ வாழ்வாயாக!

234. தலைவி கூற்று

234. தலைவி கூற்று

பாடியவர்: மிளைப்பெருங் கந்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 146 – இல் காணலாம்.
திணை:
முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கூற்று விளக்கம்: கார் காலம் வந்தது. மாலை நேரத்தில் முல்லைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. இதைக் கண்ட தலைவிக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. “அறிவு மயங்கியோர், முல்லைப் பூக்கள் மலரும் நேரத்தை மட்டும் மாலை நேரம் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப்போல் தம் துணைவரைப் பிரிந்திருப்பவர்களுக்கு எந்நேரமும் மாலை நேரம்தான்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.


சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே. 

கொண்டு கூட்டு: மயங்கியோர், சுடர்செல் வானம் சேப்ப,  படர்கூர்ந்து எல் அறு
பொழுதில் முல்லை மலரும் மாலை என்மனார்; துணையிலோர்க்கு நெடுநகர்
குடுமிக் கோழி இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலைபகலும் மாலை.

அருஞ்சொற்பொருள்: சுடர் = கதிரவன்; சேப்ப = சிவக்க; படர் = துன்பம்; எல் = ஓளி; நெடுநகர் = பெரிய நகரம் ; குடுமி = கோழியின் கொண்டை; இயம்பும் = கூவும்; விடியல் = விடியற் காலம்.


உரை: (தோழி!),அறிவு மயங்கியோர், கதிரவன் மறைந்து சென்ற வானம் சிவப்பு நிறத்தை அடைந்து, துன்பம் மிகுகின்ற, ஒளி மங்கிய பொழுதில், முல்லைப்பூ மலர்கின்ற, நேரத்தை மாலைக் காலம், என்று கூறுவர்;  துணைவரைப் பிரிந்தவர்களுக்கு, பெரிய நகரத்தில், உச்சிக் கொண்டையையுடைய கோழி கூவுகின்ற,  பெரிய இருள் விலகுகின்ற விடியற் காலமும், மாலைக் காலமாகும்; பகற் காலமும் மாலைக் காலமாகும்.

233. தலைவன் கூற்று

233.  தலைவன் கூற்று

பாடியவர்: பேயனார். முல்லைத் திணை வளங்களை சிறப்பாகப் பாடுவதில் இவர் மிக்க ஆற்றல் உடையவர். இவர் ஐங்குறுநூற்றின் ஐந்தாவது நூறாகிய முல்லைத்திணைப் பாடல்களையும் (401 – 500), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (233, 359, 400), அகநானூற்றில் ஒரு பாடலும் (234) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: பட்டபின்றை (பட்ட பின்றை - களவு வெளிப்பட்ட பிறகு) வரையாது சென்று வினைமுற்றி மீளுந் தலைமகன்,தேர்ப்பாகற்குச்             சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய களவொழுக்கம் அனைவருக்கும் தெரிய வந்ததுதலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தான், அதனால், திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்றான். அவன் தேடிய பொருளோடு திரும்பிவரும் பொழுது, தன் தலைவியின் ஊரை மகிழ்ச்சியோடு தேர்ப்பாகனுக்குச் சுட்டிக்காட்டுகிறான்.

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! 

கொண்டு கூட்டு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றிநிரைகோல் குறுந்தொடி தந்தை ஊர் கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஓள் வீ தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன கார் எதிர் புறவினது.

அருஞ்சொற்பொருள்: கவலை = ஒரு வகைக் கிழங்கு; கெண்டிய = தோண்டிய; ஒள் = ஒளி பொருந்திய ; வீ = பூ; தாஅய் = பரவிய ; மூய் = மூடி ; புறவு = முல்லை நிலம்; மிச்சில் = எஞ்சிய பொருள்; வரைகோள் = இவ்வளவு என்று ஒரு எல்லை கொள்ளுதல்; சொன்றி = சோறு; கோல் = திரண்ட.


உரை: (பாக!) திரண்ட சிறிய வளையல்களை வரிசையாக அணிந்துள்ள என் தலைவியினுடைய தந்தையின் ஊர், உயர்ந்தவர்களுக்கு நீரோடு தானம் செய்து கொடுத்த  பிறகு எஞ்சிய பொருளும், யாவருக்கும் எல்லை இல்லாத அளவுக்குச் சோறும் உடையது.  அந்த ஊர், கவலைக் கிழங்கைத் தோண்டி எடுத்ததால் உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழிகளில்,  ஒளி பொருந்திய கொன்றை மலர் நிறைந்து பரவி இருப்பதால்,  செல்வந்தர்கள், பொன்னையிட்டு வைக்கும் பெட்டியின், மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது.

232. தோழி கூற்று

232. தோழி கூற்று

பாடியவர்:
ஊண் பித்தையார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது. இவர் ஒரு பெண்பாற் புலவர் என்றும், இவர் உணவின்மேல் அதிக விருப்பமுடையவராக இருந்ததால், இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
திணை: . பாலை.
கூற்று: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது (வற்புறுத்தியது = துணிவாகச் சொல்லியது).
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி, தலைவனின் பிரிவால் வருந்துகிறாள். அதைக் கண்ட தோழிஅவர் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டார்சென்ற வேலை முடியாததால் அவர் இன்னும் வரவில்லை. வேலை முடிந்ததும், அவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழிமரல் புகா அருந்திய மா எருத்து இரலை உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய,  யாஅ வரிநிழல் துஞ்சும் மா இரும் சோலை மலை இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்?

அருஞ்சொற்பொருள்: உள்ளுதல் = நினைத்தல்; வாய்ப்பு = வாய்த்தல்; மரல் = ஒரு வகைக் கொடி; புகா = உணவு ; மா = பெரிய; எருத்து = கழுத்து; இரலை = ஆண்மான்; யாஅ = யா மரம்; வரி = புள்ளி; இரும் = பெரிய; துஞ்சும் = தூங்கும்; இறந்தோர் = கடந்து சென்றவர்.

உரை: தோழி! மரல் என்னும் கொடியை உணவாக உண்ட, பெரிய கழுத்தையுடைய ஆண்மான், உரலைப் போன்ற காலை உடைய யானை முறித்து உண்டு எஞ்சிய, யா மரத்தின் புள்ளிகளை உடைய நிழலில் தூங்குகின்ற, மிகப் பெரிய சோலைகளை உடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், நம்மை நினைக்க மாட்டாரோ? அவர் நிச்சயம் நம்மை நினைப்பார். அவர் நம்மை நினைத்தாலும், எதற்காகச் சென்றாரோ அந்த வேலையை முடித்துத் திரும்பிவருவதற்குரிய காலத்தை உணராததால், அவர் இன்னும் வராமல் இருக்கிறார்.

சிறப்புக் குறிப்பு: யா மரத்தின் இலைகளை யானை தின்றதால், எஞ்சியுள்ள இலைகளால் உண்டாகும் நிழல் அடர்த்தியானதாக இல்லை. அதனால்தான், அந்த நிழல்புள்ளிகளையுடைய நிழல்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரல் என்னும் கொடியை உண்ட பிறகு, யாமரத்தின் அடியில் இளைப்பாறும் ஆண்மானைக் கண்டவுடன், தானும் தன் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று தலைவியுடன் இன்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவனுக்குத் தோன்றும் என்பது குறிப்பு.


231. தலைவி கூற்று

231. தலைவி கூற்று 

பாடியவர்:
பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு சிலகாலம் வாழ்ந்தான். பின்னர் தன் நடத்தை தவறானது என்பதை உணர்ந்தான். இப்பொழுது, தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். தோழி, “உன் கணவர் உன்னோடு வாழ விரும்புகிறார். அவர் தன் தவறை உணர்ந்துவிட்டார். அவரை மன்னித்து ஏற்றுக்கொள்என்று தலைவியிடம் வேண்டுகிறாள். தலைவி, தலைவன்மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தித் தோழியின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள்.

ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.

கொண்டு கூட்டு: ஓரூர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; நாணட்டு நல்லறிவு இழந்த காமம் வில்லுமிழ் கணையிற் சென்று சேண் பட, ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப.

அருஞ்சொற்பொருள்: சேரி = தெரு (சேர்ந்து வாழும் இடம் சேரி); ஆர = மிக (நன்றாக); முயங்குதல் = தழுவுதல். ஏதிலாளர் = அயலார்; சுடலை = சுடுகாடு; மன், அசைச்சொற்கள்; அட்டு = அழித்து; கணை = அம்பு;சேண் = தொலை.

உரை: தலைவர் நம்மோடு ஓரே ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும் தெருவிற்கு வரமாட்டார். நாம் இருக்கும்  தெருவிற்கு வந்தாலும் அவர் என்னை நன்றாகத் தழுவ மாட்டார். நாணத்தை அழித்து, நன்மை தீமைகளை உணரும் அறிவை இழந்த என்னுடைய காமம், வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல, நெடுந்தூரத்தில் விழுந்து அழியும்படி, அயலாருடைய சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுவது போல் நம்மைக் கண்டும் காணாதவர் போல் விலகிச் செல்கிறார்.


சிறப்புக் குறிப்பு: காதல் விரைவில் அழிவதற்கு, வில்லிலிருந்து எறியப்பட்ட அம்பு உவமை.

230. தோழி கூற்று

230.  தோழி கூற்று


பாடியவர்: அறிவுடை நம்பி. இவரும் பாண்டியன் அறிவுடை நம்பி என்பவரும் ஒருவர் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் ஒரு பாடலும் (188), குறுந்தொகையில் ஒரு பாடலும் (230), நற்றிணையில் ஒரு பாடலும் (15), அகநானூற்றில் ஒருபாடலும் (28) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று: வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.
கூற்று விளக்கம்: சில நாட்களாக, ஏதோ காரணத்தினால் தலைவன் தலைவியைக் காண வரவில்லை. தான் வராததால் தன்மீது தலைவி கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், “என்னை ஏற்றுக் கொள்ளுமாறு தலைவியிடம் கூறுஎன்று தோழியை வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, ”தலைவன் உன்னைக் காண வராமல் இருப்பவன் அல்லன். நான்தான் உன்னிடம் எனக்குள்ள உரிமையினால், அவன் மனம் புண்படும்படி ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. அவன்மீது கோபம் கொள்ளாமல் அவனை ஏற்றுக்கொள்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீர் அத்தம்
சின்னாள் அன்ன வரவறி யானே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! கொண்கன்வயச்சுறா வழங்கும் நீர் அத்தம் சின்னாள் அன்ன வரவு அறியான். தான் அது துணிகுவன் அல்லன். யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: அம்ம = நான் சொல்வதைக் கேட்பாயாக; கொண்கன் = நெய்தல் நிலத் தலைவன்; துணிகுவன் = துணிபவன்; தகை = உரிமை; கெழுமி = பொருந்தி (அணுகி); நோதக = வருந்துமாறு; வயம் = வலிமை; அத்தம் = வழி; சின்னாள் = சில் + நாள் = சில நாட்கள்; கொல், , அசைச்சொற்கள்.

உரை: தோழி! நீ வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! நெய்தல் நிலத் தலைவன், வலிய சுறா மீன்கள் வழங்குகின்ற நீரை உடைய வழியில்,சில நாட்களாக, முன்னர் வந்து கொண்டிருந்தது போல் வரவில்லை. அவன் தானாகவே அவ்வாறு வராமல் இருப்பதற்குத் துணியக்கூடியவன் அல்லன். நான் என் அறிவின்மையாலும், உன்னிடம் எனக்குள்ள பெரிய உரிமையாலும் அவன் வருந்தி இங்கே வாராதவாறு செய்த ஒரு குற்றத்தை உடையேன்.