Sunday, August 14, 2016

232. தோழி கூற்று

232. தோழி கூற்று

பாடியவர்:
ஊண் பித்தையார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது. இவர் ஒரு பெண்பாற் புலவர் என்றும், இவர் உணவின்மேல் அதிக விருப்பமுடையவராக இருந்ததால், இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
திணை: . பாலை.
கூற்று: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது (வற்புறுத்தியது = துணிவாகச் சொல்லியது).
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி, தலைவனின் பிரிவால் வருந்துகிறாள். அதைக் கண்ட தோழிஅவர் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டார்சென்ற வேலை முடியாததால் அவர் இன்னும் வரவில்லை. வேலை முடிந்ததும், அவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழிமரல் புகா அருந்திய மா எருத்து இரலை உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய,  யாஅ வரிநிழல் துஞ்சும் மா இரும் சோலை மலை இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்?

அருஞ்சொற்பொருள்: உள்ளுதல் = நினைத்தல்; வாய்ப்பு = வாய்த்தல்; மரல் = ஒரு வகைக் கொடி; புகா = உணவு ; மா = பெரிய; எருத்து = கழுத்து; இரலை = ஆண்மான்; யாஅ = யா மரம்; வரி = புள்ளி; இரும் = பெரிய; துஞ்சும் = தூங்கும்; இறந்தோர் = கடந்து சென்றவர்.

உரை: தோழி! மரல் என்னும் கொடியை உணவாக உண்ட, பெரிய கழுத்தையுடைய ஆண்மான், உரலைப் போன்ற காலை உடைய யானை முறித்து உண்டு எஞ்சிய, யா மரத்தின் புள்ளிகளை உடைய நிழலில் தூங்குகின்ற, மிகப் பெரிய சோலைகளை உடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், நம்மை நினைக்க மாட்டாரோ? அவர் நிச்சயம் நம்மை நினைப்பார். அவர் நம்மை நினைத்தாலும், எதற்காகச் சென்றாரோ அந்த வேலையை முடித்துத் திரும்பிவருவதற்குரிய காலத்தை உணராததால், அவர் இன்னும் வராமல் இருக்கிறார்.

சிறப்புக் குறிப்பு: யா மரத்தின் இலைகளை யானை தின்றதால், எஞ்சியுள்ள இலைகளால் உண்டாகும் நிழல் அடர்த்தியானதாக இல்லை. அதனால்தான், அந்த நிழல்புள்ளிகளையுடைய நிழல்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரல் என்னும் கொடியை உண்ட பிறகு, யாமரத்தின் அடியில் இளைப்பாறும் ஆண்மானைக் கண்டவுடன், தானும் தன் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று தலைவியுடன் இன்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவனுக்குத் தோன்றும் என்பது குறிப்பு.


No comments:

Post a Comment