Monday, August 29, 2016

243. தலைவி கூற்று

243. தலைவி கூற்று

பாடியவர்: நம்பி குட்டுவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 109 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வன்புறை யெதிர் அழிந்து சொல்லியது (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று விளக்கம்: தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி உறக்கமின்றி வருந்துகிறாள். “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையக இருஎன்று வற்புறுத்திய தோழிக்கு மறுமொழியாகத் தலைவி, “ நான் தலைவன் நினைவாகவே இருப்பதால்தான் என்னால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; உறங்க முடியவில்லை. இனிமேல், நான்  அவரை நினைக்க மாட்டேன். ஆகவே, என் கண்கள் இனி நன்கு உறங்கலாம்என்று கூறுகிறாள்.

மானடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. 

கொண்டு கூட்டு: தோழி மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதிஒண்தொடி மகளிர் வண்ட ல் அயரும் புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை  உள்ளேன்; படீஇயர் என் கண்ணே. 

அருஞ்சொற்பொருள்: கவடு = பிளவு; அடும்பு = நெய்தல் நிலத்தில் படரும் ஒரு வகைக்  கொடி; தார் = கழுத்துப் பட்டை, மாலை (இங்கு குதிரை அல்லது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மாலையைக் குறிக்கிறது); கொழுதுதல் = கிழித்தல், வலிந்து கையால் மலரச் செய்தல்; வண்டல் = சிறுமியர் விளையாட்டு; அயர்தல் = விளையாடுதல்; இமிழ்தல் = ஒலித்தல்; படீஇயர் = உரங்குக.

உரை: தோழி! மானின் குளம்பைப் போன்ற பிளவுபட்ட இலைகளை உடைய அடும்பினது, குதிரையின் கழுத்தில் இடும் மாலையின்கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிந்து மலரச் செய்து, ஒளிபொருந்திய வளையல்களையுடைய பெண்கள் விளையாடுகின்ற,  பறவைகள் ஒலிக்கின்ற, பெரிய கடற்கரைக்குத் தலைவனை, இனி நினைக்க மாட்டேன்; ஆதலின், என் கண்கள் உறங்குவனவாக.


சிறப்புக் குறிப்பு: பெண்கள் மலர்களின் மொட்டுக்களைத் தங்கள் விரல்களால் வலிய மலரச் செய்து விளையாடிய பொழுது, பூக்களைத் துன்புறுத்தியது போல், தலைவன் தன் பணியிலேயே கவனம் செலுத்தித் தலைவியை த் தனிமையில் தவிக்கவிட்டுக் கொடுமை செய்தான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

No comments:

Post a Comment