Sunday, August 14, 2016

230. தோழி கூற்று

230.  தோழி கூற்று


பாடியவர்: அறிவுடை நம்பி. இவரும் பாண்டியன் அறிவுடை நம்பி என்பவரும் ஒருவர் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் ஒரு பாடலும் (188), குறுந்தொகையில் ஒரு பாடலும் (230), நற்றிணையில் ஒரு பாடலும் (15), அகநானூற்றில் ஒருபாடலும் (28) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று: வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.
கூற்று விளக்கம்: சில நாட்களாக, ஏதோ காரணத்தினால் தலைவன் தலைவியைக் காண வரவில்லை. தான் வராததால் தன்மீது தலைவி கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், “என்னை ஏற்றுக் கொள்ளுமாறு தலைவியிடம் கூறுஎன்று தோழியை வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, ”தலைவன் உன்னைக் காண வராமல் இருப்பவன் அல்லன். நான்தான் உன்னிடம் எனக்குள்ள உரிமையினால், அவன் மனம் புண்படும்படி ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. அவன்மீது கோபம் கொள்ளாமல் அவனை ஏற்றுக்கொள்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீர் அத்தம்
சின்னாள் அன்ன வரவறி யானே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! கொண்கன்வயச்சுறா வழங்கும் நீர் அத்தம் சின்னாள் அன்ன வரவு அறியான். தான் அது துணிகுவன் அல்லன். யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: அம்ம = நான் சொல்வதைக் கேட்பாயாக; கொண்கன் = நெய்தல் நிலத் தலைவன்; துணிகுவன் = துணிபவன்; தகை = உரிமை; கெழுமி = பொருந்தி (அணுகி); நோதக = வருந்துமாறு; வயம் = வலிமை; அத்தம் = வழி; சின்னாள் = சில் + நாள் = சில நாட்கள்; கொல், , அசைச்சொற்கள்.

உரை: தோழி! நீ வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! நெய்தல் நிலத் தலைவன், வலிய சுறா மீன்கள் வழங்குகின்ற நீரை உடைய வழியில்,சில நாட்களாக, முன்னர் வந்து கொண்டிருந்தது போல் வரவில்லை. அவன் தானாகவே அவ்வாறு வராமல் இருப்பதற்குத் துணியக்கூடியவன் அல்லன். நான் என் அறிவின்மையாலும், உன்னிடம் எனக்குள்ள பெரிய உரிமையாலும் அவன் வருந்தி இங்கே வாராதவாறு செய்த ஒரு குற்றத்தை உடையேன்.


No comments:

Post a Comment