Monday, August 29, 2016

239. தலைவி கூற்று

239. தலைவி கூற்று

பாடியவர்: ஆசிரியர் பெருங்கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பலநாட்கள் கூடி மகிழ்ந்தார்கள்தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை. அவன் அவளோடு களவொழுக்கத்தில் கூடி மகிழ்வதையே விரும்புகிறான். அவர்களின் காதல், ஊரில் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. அதனால், ஊர் மக்கள் அலர் பேசுகிறார்கள். தலைவி வருந்துகிறாள். தலைவன் தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள். அவளைக் காணத் தலைவன் வந்து வேலிக்குப் புறமாக நின்றுகொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த தலைவி, தன் வருத்தத்தையும் விருப்பத்தையும் தோழியிடம் கூறுவதுபோல் தலைவன் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.


தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. 

கொண்டு கூட்டு: தோழி விடர்முகைச் சிலம்பு உடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந்தாது ஊ துங் குறுஞ்சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும்  முந்தூழ் வேலிய, மலை கிழவோற்கே தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடுநாண் உண்டோ?

அருஞ்சொற்பொருள்: தொடி = வளையல்; சாயின = மெலிந்தன; விடர் = பிளவு; முகை = குகை; சிலம்பு = மலை; அலங்குதல் =அசைதல்; குலை = கொத்து; குறுஞ்சிறை = சிறிய சிறகு; தும்பி = ஒரு வகை வண்டு; முந்தூஉழ் = மூங்கில்.

உரை: தோழி! பிளவுகளையும் குகைகளையும் உடைய மலை முழுவதும் மணம் வீசும், அசைகின்ற கொத்துக்களாக உள்ள காந்தட் பூவின் மணமுள்ள தாதை ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு, பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலக் காட்சி அளிக்கிறது. அந்த மலைகளுக்கு  மூங்கில் வேலியாக உள்ளது. அத்தகைய மலைகளை உடைய தலைவன் பொருட்டு, என் வளையல்கள் நழுவின; என் தோள்கள் மெலிந்தன; இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ? அது முன்னரே ஒழிந்தது.


சிறப்புக் குறிப்பு: காந்தள் மலரின் தாது இயற்கையாகவே மணம் கமழும் தன்மை உடையதானாலும், தும்பி ஊதியதால் இன்னும் அதிகமாக மணம் கமழ்வதாயிற்று. பாம்பு காந்தளுக்கும், பாம்பு உமிழும் மணி வண்டுக்கும் உவமைகள். ”காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் அச்சம் தரும் தோற்றத்தைத் தந்தது போல, எங்கள் நட்பும் அஞ்சுவதற்கு உரியதாயிற்றுஎன்று தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது.  காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போலத் தலைவன் என் நலனை நுகர்ந்து எங்கும் அலர் (பழிச்சொற்கள்)  பரவும்படிச் செய்தான் என்றும் அதனால், தன் மேனி மெலிந்ததையும் நாணம் அழிந்ததையும் கூறித் திருமணத்தின் இன்றியமையாமையைத் தலைவனுக்குத் தலைவி புலப்படுத்துகிறாள்

No comments:

Post a Comment