Sunday, August 14, 2016

235. தலைவன் கூற்று

235. தலைவன் கூற்று

பாடியவர்: மாயேண்டனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: வரையாது பிரிந்து வருவான் (வருவான் - மீண்டு வரும் தலைவன்) வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன், தான் தேடிச் சென்ற பொருளைப் பெற்றுத் திரும்பிவருகிறான். வரும் வழியில் தலைவியின் ஊர் அவன் கண்களில் படுகிறது. அவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், இப்பொழுது கார்காலம் முடிந்து குளிர்காலம் வந்தது. குளிர்காலம் வந்ததால் வாடைக்கற்று வீசுகிறது. தன்னைப் பிரிந்திருக்கும் தலைவி, வாடைக் காற்றினால் வருந்துவாள் என்பது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. ஆகவே, ”என் தலைவியை வருத்தாமல் பாதுகாப்பாயாகஎன்று வடைக்காற்றை வேண்டுகிறான். இப்பாடலைத் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்ததாகக் கருதாமல், வாடைக் காற்றை நோக்கிக் கூறியதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. 

கொண்டு கூட்டு:
வாடை! நெல்லி மரையினம் ஆரும் முன்றில் புல்வேய் குரம்பை நல்லோள் ஊர்பாம்பின் தூங்குதோல் கடுக்கும் தூவெள் அருவிக் கல் உயர் நண்ணியது. ஓம்புமதி! வாழியோ!

அருஞ்சொற்பொருள்: ஓம்புதல் = பாதுகாத்தல்; தூங்கும் = தொங்கும்; கடுத்தல் = ஒத்தல்; கல் = மலை; நண்ணியது = அருகில் உள்ளது; மரை = ஒரு வகை மான்; ஆரும் = உண்ணும்; முன்றில் = முற்றம்; குரம்பை = குடிசை.


உரை: வாடைக் காற்றே! நெல்லிக்காயை, மரை என்னும் மானினம் உண்ணுகின்ற முற்றத்தை உடைய, புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய,  நல்ல தலைவியின் ஊர், பாம்பு உரித்த தோல் தொங்குவதைப் போல் விழும்  தூய வெண்மையான அருவியை உடைய, மலை  உச்சிக்கு அருகில்  உள்ளது. அங்கே உள்ள என் தலைவியை நீ பாதுகாப்பாயாக! நீ வாழ்வாயாக!

No comments:

Post a Comment