Sunday, January 8, 2017

291. தலைவன் கூற்று

291.  தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைக் காதலிக்கிறான். ஒருநாள், அவள் தினைப்புனத்திற்கு வரும் கிளிகளை வெருட்டுவதற்காக வந்து குளிர் என்னும் இசைக்கருவியை இசைத்துப் பாடிக்கொண்டிருந்தாள். குளிரின் ஓசையையும், அவள் பாடியதையும் கேட்ட கிளிகள், தலைவி தம்மை அழைப்பதாக எண்ணி, தினைப்புனத்திலிருந்து விலகாமல் அங்கேயே இருந்தன. அதைக் கண்ட தலைவி, தன்னால் கிளிகளை வெருட்ட முடியவில்லையே என்பதை நினைத்து அழுதுகொண்டிருந்தாள். இந்தக் காட்சி தலைவனின் உள்ளத்தில் பதிந்துவிட்டது. அவன் அதையே மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துகொண்டிருக்கிறான். அப்பொழுது, தலைவனின் தோழன் தலைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறான். தலைவனின் நிலையைக் கண்ட தோழன், “உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இந்த ஆழ்ந்த சிந்தனை?” என்று கேட்கிறான். தோழனின் கேள்விக்குத் தலைவனின் மறுமொழியாக இந்தப் பாடல் அமைந்துள்ளது

சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழலொல் லாவே
அதுபுலந் தழுத கண்ணே சாரற்
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத்
தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே. 

கொண்டு கூட்டு: சுடுபுன மருங்கில் கலித்த ஏனல் படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிர்இசையின் இசையா இன்பாணித்துகிளி அவள் விளியென எழல் ஒல்லாஅது புலந்து அழுத கண், சாரற் குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளைவண்டு பயில் பல் இதழ் கலைஇதண்துளிக்கு ஏற்ற மலர் போன்றன
அருஞ்சொற்பொருள்: புனம் = கொல்லை (நிலம்), தினைப் புனம்; சுடுபுனம் = மரங்களை வெட்டிச் சுட்டெரித்த கொல்லை; மருங்கு = பக்கம்; கலித்த = தழைத்த; ஏனல் = தினை; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப்பெண்; குளிர் = ஒரு இசைக் கருவி; இசையா = பொருந்தி; பாணி = தாளம்; விளித்தல் = அழைத்தல்; ஒல்லுதல் = இயலுதல்; புலந்து = வெறுத்து; குண்டு நீர்ஆழமான நீர்; பை = பசுமை; பயிலுதல் = பழகுதல்; பல்லிதழ் = பல்+இதழ் = பல இதழ்கள்; கலைஇ = கலைந்து.
உரை: மரங்களை வெட்டிச் சுட்டெரித்துப் பண்படுத்திய கொல்லைப் பக்கத்தில், தழைத்து விளைந்த தினைப்புனத்தில் வந்து வீழ்கின்ற கிளிகளை ஓட்டுகின்ற, தலைவியின் (என் காதலியின்) கைகளில் உள்ள குளிர் என்னும் கருவியானது,  இசையோடு பொருந்தி, இனியதாளத்தை உடையதாக இருந்தது. அக்குளிரின் ஓசையை, தலைவி தம்மை அழைக்கும் ஓசை என்று கருதி, கிளிகள் தாம் படிந்த தினைப்புனத்திலிருந்து எழுந்து பறக்க இயலாமல் இருந்தன. கிளிகளை வெருட்ட முடியாததால், தலைவி தன் நிலையை வெறுத்து அழுதாள். கண்ணீர் வடியும் அவளுடைய கண்கள், மலைப்பக்கத்திலே உள்ள, ஆழமான நீரை உடைய பசிய சுனையில் பூத்த குவளைமலர்களில் வண்டுகள் படிந்து, பல இதழ்கள் கலைந்து, குளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக் கொண்ட  மலர்களைப் போலிருந்தன.

சிறப்புக் குறிப்பு: தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டுபவர்கள் மூங்கிலை வீணை போல் கட்டித் தம் விரலால் தெறித்து இசை எழுப்பும் கருவிக்குக் குளிர் என்று பெயர்

No comments:

Post a Comment