Sunday, January 22, 2017

296. தலைவி கூற்று

296.  தலைவி கூற்று

பாடியவர்: பெரும்பாக்கனார்.
திணை: நெய்தல்.
கூற்று : காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களொவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். சிலநாட்களாகத் தலைவனைக் காண முடியவில்லைஅதனால் தலைவி வருத்தம் அடைந்தாள்; உடல் மெலிந்தாள். இன்று, அவன் வந்து தலைவியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான்அவன் வந்திருப்பதை அறிந்த தலைவி,  ”தலைவனைக் கண்டால், என்னை இவ்வாறு வருத்தம் அடையச் செய்வது முறையா என்று அவனைக் கடுமையாகக் கடிந்துரைக்க வேண்டாம்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே.

 கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! புன்னை அலங்குசினை இருந்த அம்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையின், செறுவில்கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணம் துறைவன் காணின், முன்நின்று,  ”தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ?” என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி

அருஞ்சொற்பொருள்: அலங்குதல் = அசைதல்; சிறை = இறகு; உறுகழி = பெரிய நீர்நிலைகள்; செறு = நெல்வயல்; கள் = மலர்த்தேன்; நயக்கும் = விரும்பும்; தண்ணம் = தண்+அம் = குளிர்ந்த அழகிய; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; கடிய = கடுமையான; கழறல் = இடித்துக் கூறுதல்; ஓம்புதல் = தவிர்த்தல்; தொடியோள் = வளையல் அணிந்தவள்; இன்னள் = இத்தன்மையை உடையவள்; ஓம்புதல் = தவிர்த்தல்.
உரை: தோழி! நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! புன்னைமரத்தின் அசையும் கிளையிலிருந்த அழகிய சிறகையுடைய நாரை, உப்பங்கழியில்  உள்ள சிறுமீனை உணவாகக் கொள்வதை வெறுத்ததால், வயலிலுள்ள, தேன் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு உண்ண விரும்புகின்ற, குளிர்ந்த அழகிய கடற்கரைத் தலைவனைக் கண்டால், அவன் முன்னே நின்று, ”வளையலை அணிந்த தலைவி இத்தன்மை உடையவளாகும்படி, பிரிந்து செல்லுதல், உமக்குத் தகுமோ?” என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைப்பதை, நீ தவிர்ப்பாயாக.
சிறப்புக் குறிப்பு: நாரை உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவன்என்றது, “மருதநிலத்திற்குரிய நாரை, நெய்தல் நிலத்தில் உள்ள சிறிய மீன்களைப் பிடித்து உண்ணுவதை வெறுத்ததால், அவ்விடத்தைவிட்டு அகன்று, மருதநிலத்திற்குச் சென்றதைப்போல், தலைவன் களவொழுக்கத்தின் பொழுது தலைவியைச் சந்திப்பது அரிதாக இருப்பதால், அவளிடமிருந்து அவன் பிரிந்திருக்க விரும்புகிறான்என்று தலைவி எண்ணுவதைக் குறிக்கிறது.
தொடியோள் இன்னளாகஎன்றது  வளையல்களை அணிந்த தலைவி, வருத்தத்தால் உடல் மெலிந்தாள். அவள் உடல் மெலிந்ததால் வளையல்கள் நெகிழ்ந்து இந்த நிலைக்கு உள்ளானாள்.” என்பதைக் குறிக்கிறது.

தோழி தலைவனைக் கடிந்துரைக்கக் கூடாது என்பது தலைவியின் நோக்கம் அன்று. வீட்டுக்கு வெளியே நிற்கும் தலைவன் தன் நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும் என்று தலைவி விரும்புவதால் அவள் தோழியிடம் அவ்வாறு கூறுகிறாள்

No comments:

Post a Comment