Sunday, February 19, 2017

311. தலைவி கூற்று

311. தலைவி கூற்று
பாடியவர்: சேந்தன் கீரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். ஒருநாள், இரவில் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின் வீட்டுக்கு வெளியே தலைவன் வந்து நிற்கிறான். அவன் வந்திருப்பது  தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். “தலைவன் தேரில் வந்ததைத் என் தோழியர் பலரும் கண்டனர். அதனால் அலர் பெருகியது.” என்று  தலைவன் காதில் கேட்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். அவள் சொல்லுவதைத் தலைவன் கேட்டால், அவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத்
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.
கொண்டு கூட்டு: தோழி! பெருங்கடல் புலவு நாறு அகன்துறை, வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்என் கடுந்தேர் யான் கண்டனனோ, இலனோ? பானாள் ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன்கண்டன்று. யாங்கு அலர் ஒழிவ?
அருஞ்சொற்பொருள்: அகன்துறை = அகன்ற துறை; வலவன் = தேர்ப்பாகன்; தாங்கவும் = தடுக்கவும்; கடுந்தேர் = விரைந்து செல்லும் தேர்; பானாள் = நடு இரவு; ஓங்கல் = உயர்ச்சி; நிகர் = ஒளி; ஆயம் = தோழியர் கூட்டம்.

உரை: தோழி! பெரிய கடலின், புலால் நாற்றம் வீசும் அகன்ற துறையில், தேர்ப்பாகன் குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், நில்லாமல் விரைந்து ஓடி, ”கல்என்னும் ஓசையை எழுப்பிய தலைவனது தேரை நான் கண்டேனோ, இல்லையோ? நடு இரவில், உயர்ந்த வெண்மையான மணல் மேட்டில், தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தின், மகரந்தம் சேர்ந்த ஒளியையுடைய மலர்களைப் பறிக்கும்,  மகளிர் கூட்டத்தினர் அனைவரும் அந்தத் தேரை ஒருங்கே கண்டனர். ஆதலால், நம்மைப் பற்றிய பழிச்சொற்கள் எவ்வாறு ஒழியும்?

No comments:

Post a Comment