Monday, August 17, 2015

68. குறிஞ்சி - தலைவி கூற்று

68. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: முன்பனிக்காலம் வந்துவிட்டது. பிரிந்துசென்ற தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி, மிகவும் வருத்தத்தோடு இருக்கிறாள். அப்பொழுது, தலைவியின் தோழி அங்கே வருகிறாள். தலைவி, “ முன்பனிக்காலமும் வந்துவிட்டது. ஆனால், இன்னும் அவர் வரவில்லை. என்னுடைய வருத்தத்தைத் தீர்க்கும் மருந்து என் தலைவனின் மார்புதான்.” என்று கூறுகிறாள்.

பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே. 
-.
அருஞ்சொற்பொருள்: பூழ் = காடை (அல்லது கானங்கோழி) செங்கால் = சிவந்த கால்; உழுந்து = உளுந்து; ஊழ்த்தல் = முதிர்தல்; உழை =  மான்; இனம் = கூட்டம்; கவர்தல் = விரும்புதல்; அற்சிரம் = அச்சிரம் = முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்); மணத்தல் = கூடுதல்.                                                                                                       

உரை: காடைப்பறவையின் காலைப் போன்ற, சிவந்த காலையுடைய உளுந்தினுடைய, மிகவும் முதிர்ந்த காய்களை, மான்கூட்டங்கள் தின்னும் பொறுத்தற்கரிய பனியையுடைய, முன்பனிக்காலத்தால் எனக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கும் மருந்து என்னைத் தழுவிய அவருடைய மார்பைத்தவிர வேறு இல்லை.


விளக்கம்: உளுந்து, பயறு போன்றவை முன்பனிக்காலத்தில் முதிரும் பயிர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ”மான்கள்கூடத்  தாம் விரும்பியதை உண்டு  தங்கள் கூட்டத்தோடு இன்பமாக இருக்கும் இந்த முன்பனிக்காலத்தில் நான் மட்டும் தலைவனைப் பிரிந்து வருத்தத்தோடு தனியளாக இருக்கிறேனே !” என்று தலைவி மறைமுகமாகக் கூறுவது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்

No comments:

Post a Comment