Monday, August 17, 2015

75. மருதம் - தலைவி கூற்று

75. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிகீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 33 – இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு வாழ்ந்துவந்தான். ஒருநாள், பாணன் ஒருவன் தலைவியிடம் வந்து, தலைவன் அவளுடைய இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகக் கூறினான். அந்தச் செய்தியைக் கேட்ட த் தலைவி பெருமகிழ்ச்சி அடைந்தாலும், அந்தச் செய்தி உண்மைதானா என்பதைத் தெளிவாகத்  தெரிந்துகொள்ள விரும்புகிறாள்.

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 

அருஞ்சொற்பொருள்: ஒன்று = உண்மை; தெளிதல் = அறிதல்; நசை = விருப்பம்; சோணைபாடலிபுத்திரம் என்னும் ஊருக்கு அருகே இருந்த ஒரு ஆறு; படிதல் = மூழ்குதல், குளித்தல், அனுபவித்தல்; மலிதல் = மிகுதல்; பாடலி = பாடலிபுத்திரம் என்னும் நகரம். பெறீஇயர் = பெறுவாயாக.

உரை: பாண, என் கணவர் வருவதை,  நீயே உன் கண்ணால் கண்டாயோ? அல்லது அவர் வரவைக் கண்டவர்களிடமிருந்து கேட்டறிந்தாயோ? பிறரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாயானால், யாரிடமிருந்து தெரிந்துகொண்டாய்? நாங்கள் உண்மையை அறிய விரும்புகிறோம். நீ  சொல்வாயாக; சொன்னால், வெண்மையான  கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் மூழ்கி விளையாடும், பொன்மிகுந்த பாடலிபுத்திர நகரத்தைப் பெறுவாயாக.

விளக்கம்: போருக்குச் சென்ற தலைவன் பாசறையிலிருக்கும் காலத்தில் பாணனைத் தலைவி தூது விடுதலும்,  தலைவனும் பாணனைத் தலைவியிடம் தூது விடுதலும்  ஐங்குறுநூற்றுப் பாடல்கள் 477, 478 மற்றும் 479 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அது ஒருமரபாக இருந்ததாகவும் , . வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார். அவ்வாறு, தூது சென்ற பாணன், தலைவன் வரவைக் கூறியதால் தலைவி அவனை வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.  

சோணை என்பது ஒரு ஆறு. அந்த ஆற்றின் வடகரையில், பழங்காலத்தில் மகத நாட்டின் தலைநகரமாக இருந்த பாடலிபுத்திரம் என்னும் நகரம் இருந்ததாகத் தெரிகிறது. பாடலிபுத்திரம் பாடலி என்று அழைக்கப்பட்டதும்  அது பொன்னால் சிறப்படைந்திருந்ததும் அகநாநானூறு மற்றும் பெருங்கதை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

 தலைவி  "பாடலிபெறீஇயர்" என்று கூறியது அவள் பாணனைப் பெருஞ்செல்வம் பெறுவாயாக என்று வாழ்த்தியதைக் குறிக்கிறது.

தலைவனுடைய வரவைத் தலைவி பலகாலமாக எதிர்பார்த்து,அவன் வராததால்  ஏமாற்றம் அடைந்திருந்ததால், தலைவன் வருகிறான் என்று பாணன் சொன்னதை நம்ப முடியாமல், ”நீ கண்டனையோ?, கண்டார்க் கேட்டனையோ?, யார்வாய்க் கேட்டனையோ? ” என்று கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறாள். இவ்வாறு அவள் பலமுறை கேட்பது கணவன் வரவில் அவளுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது,


மொழிமோ என்பதில், மோ என்பது முன்னிலை அசை.

No comments:

Post a Comment