Sunday, August 30, 2015

82. குறிஞ்சி - தலைவி கூற்று

82. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கடுவன் மள்ளனார்: தமிழ்நாட்டில் கடுவங்குடி என்ற பெயருள்ள ஊர்கள் பல உள்ளன. கடுவன் என்பது கடுவங்குடி என்பதின் திரிபாக இருக்கலாம் என்று உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார்.இவர் அகநானூற்றில் மூன்று பாடல்களும் ( 70, 256, 354) குறுந்தொகையில் ஒருபாடலும் (82) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: முன்பனிக்காலம் வந்தும் இன்னும் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். “அவர் உன்மீது மிகவும் அன்புடையவர். அவர் விரைவில் திரும்பி வருவார். நீ கவலைப்படாதே.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்குத் தலைவி, “ பிரிந்து செல்வதற்கு முன் அன்புயுடையவராகத்தான் இருந்தார். ஆனால், முன்பனிக்காலம் வந்தும் அவர் இன்னும் வரவில்லையே.  இனி என்னோடு அன்பாகவும் எனக்கு ஆதரவாகவும் இருப்பவர் யார்?”  என்று தன் ஐயத்தையும் அச்சத்தையும்  தோழியிடம் தெரிவிக்கிறாள்.
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாரா தோரே. 

கொண்டுகூட்டு: தோழி, சாரல் பெரும்புனம் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும் அரும்பனி அச்சிரம் வாராதோர் வார் உறு வணர் கதுப்பு உளரிப் புறம் சேர்பு அழாஅல் என்று நம் அழுதகண் துடைப்பார். யார் ஆகுவர் கொல்?

அருஞ்சொற்பொருள்: வார் =நீளம்; உறுதல் = பொருந்துதல்; வணர் = சுருண்ட முடி; கதுப்பு = கூந்தல் ; உளர்தல் = கோதுதல்; புறம் = முதுகு; சேர்பு = சார்ந்து; அழாஅல் = அழாதே; சாரல் = மலைப்பக்கம்; புனம் = வயல் (தினைப்புனம்); மறுகால் = தினையரிந்தபின் இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர்; கொழுமை = செழுமை; அச்சிரம் = முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்).

உரை: தோழி, மலைப்பக்கத்தில் குறவனது பெரிய தினைப்புனத்தில், முதலில் விளைத்த  தினைய அறுவடை செய்தபின், அதன் மறுகால் பயிருனூடே செழிப்பாக வளர்ந்துள்ள அவரைக் கொடி பூக்கும், பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலம் வந்துவிட்டது. என் தலைவர் இன்னும் வரவில்லையே! முன்பு, (நான் அழுதால்) அவர் என்னுடைய நீண்ட சுருண்ட கூந்தலைத் தடவி, முதுகை சேர்த்து அணைத்துக்கொண்டுஅழாதேஎன்று கூறி என் கண்ணீரைத் துடைப்பார். இனி, நான் அழுதால், என்னை அன்போடு அணைத்து என் கண்ணீரைத் துடைப்பவர் யார்?  

விளக்கம்:   குறவன், ஒருமுறை அறுவடை செய்த தினைப்பயிரால் பயன்பெற்றது மட்டுமல்லாமல் மீண்டும் மறுகாலில் விளையும் பயிராலும் அவரையாலும் பயன்பெறுதற்குரிய முன்பனிக்காலம் என்றது தலைவன் பிரிந்து செல்வதற்குமுன் தலைவியோடு இன்புற்றதல்லாமல், தன் பணியை முடித்துத் திரும்பிவந்து மீண்டும் தலைவியோடுகூடி இன்புற்றிருப்பதற்குரிய முன்பனிக்காலம் என்று உள்ளுறை உவமமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.  

No comments:

Post a Comment