Thursday, October 15, 2015

102. தலைவி கூற்று

102. தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவறைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15-இல் காணலாம்.
திணை: நெய்தல்.
 கூற்று: ஆற்றாளெனக் கவன்ற (கவலையுற்ற) தோழிக்குக் கிழத்தி (தலைவி), ‘யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?’ என்றது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று நீண்ட காலம் ஆகிவிட்டதே. தலைவி என்ன பாடுபடுவாளோ !” என்று தோழி கவலைப்படுகிறாள். தோழி கவலைப்படுவதை அறிந்த தலைவி, “அவரை நினைத்து நினைத்து நான் காமநோயால் வருந்துகிறேன், அவர் இன்னும் வரவில்லையே ! இந்தப் பிரிவை நான் எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லையே!”என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே. 

கொண்டு கூட்டு: உள்ளின் உள்ளம் வேம்;  உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று. காமம்  வருத்தி வான்தோய்வற்று. யாம் மரீஇயோர் சான்றோர் அல்லர். 

அருஞ்சொற்பொருள்: வேம் = வேகும்; அளவைஅளவு; தோய்தல் = தொடுதல், மருவுதல் = தழுவுதல்.

உரை: தலைவரை நினைத்தால் என் உள்ளம் வேகும். நினையாமல் இருக்கலாம் என்றால், அவ்வாறு  இருத்தல் எனது ஆற்றல் அளவிற்கு உட்பட்டது அன்றுவானத்தைத் தொடுவது போன்று மிகப் பெரிதாக என்னைக் காமநோய் வருத்துகிறது. என்னால் தழுவப்பட்ட என் தலைவர் சான்றோர் அல்லர்.


சிறப்புக் குறிப்பு:     ”என் துயரத்தை அறியாததால் அவர் அன்புடையவர் அல்லர். அவருடைய பிரிவு நீட்டித்தலால் என் உடலில் உண்டாகிய வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் பழித்துரைப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் பிரிந்தே இருப்பதால் அவர் நாணமில்லாதவர்.  இல்லறத்தில் இருப்பவர்கள் தம் தலைவியருடன் இருந்து இன்புறும் உலக வழக்கை மறந்ததால் அவர் ஒப்புரவு (உலகத்தார் போற்றும் நல்லொழுக்கம்) இல்லாதவர். என் துயரத்தை நீக்க வாராததால் அவர் கண்ணோட்டம் இல்லாதவர். தாம் கூறிய காலத்தில் திரும்பி வராததால் அவர் வாய்மை உடையவர் அல்லர். ஆகவே, அவர் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற சான்றாண்மைக்கு இன்றியமையாத ஐந்து பண்புகளும் இல்லாதவர் ஆகையால் அவர் சான்றோர் அல்லர்.” என்று தலைவி எண்ணுவதாகவும், “அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு, ஐந்துசால்பு ஊன்றிய தூண் (குறள், 983) என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகவும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

No comments:

Post a Comment