Tuesday, October 6, 2015

91. தலைவி கூற்று அல்லது தோழி கூற்று

91. தலைவி கூற்று அல்லது தோழி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: மருதம்
கூற்று: 1) பரத்தையர் மாட்டுப் பிரிந்த தலைமகன், வாயில் வேண்டிப் புக்கவழித் (தூதுவன் வந்து கேட்ட பொழுது) தன் வரைத்தன்றி அவன் வரைத்தாகித் (மனம் தன் கட்டுப்பாட்டை விட்டு அவனிடம் சென்று) தன் நெஞ்சு நெகிழ்ந்துழித் தலைமகள் அதனை (நெஞ்சை) நெருங்கிச் சொல்லியது.
கூற்று: 2) பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் (தலைவியைத்) தோழி கூறியதூஉமாம்.
 கூற்று விளக்கம் -1: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையுடன் வாழ்கிறான். அவன் தன் இல்லத்திற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியுடன் வாழ விரும்புகிறான். தன் விருப்பத்தைத் தெரிவிக்கப் பாணன் ஒருவனைத் தலைவன் தூதுவனாக அனுப்புகிறான். தலைவி தலைவன்மீது கோபமாக இருக்கிறாள்தூதுவன் தலைவன் திரும்பிவந்து உன்னோடு வாழ விரும்புகிறான்.” என்று சொன்னவுடன், தலைவியின் நெஞ்சம் தலைவன் வரவை விரும்புகிறது. தன் நெஞ்சம் தலைவன் வரவை விரும்புவதைக் கண்ட தலைவி, “அவனை அன்போடு நீ ஏற்றுக் கொண்டால், நீ  பலநாட்கள் தூக்கமின்றித் துன்பத்தை அடைவாய்என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறாள்.

கூற்று விளக்கம் – 2: இந்தப் பாடலின் பின்னணியை சற்று வேறுவிதமாகவும் எண்ணிப் பார்க்கலாம். தலைவனை ஏற்றுக்கொள்ள விரும்பும் தலைவியை நோக்கித்  தோழி, “ நீ இப்பொழுது அவனை ஏற்றுக் கொண்டால் அவன் மீண்டும் உன்னை விட்டுவிட்டுப் பரத்தையிடம் செல்லமாட்டான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ அவனை ஏற்றுக் கொண்டால், நீ பல நாட்கள் தூக்கமின்றித் துன்பப்படப் போகிறாய்.” என்று எச்சரிப்பதாகவும் எண்ணிப் பார்க்கலாம். இந்தப் பின்னணியில், இந்தப் பாடலைத்  தோழியின் கூற்றாகக் கருதுவது சிறந்ததாகத் தோன்றுகிறது.

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே. 

கொண்டுகூட்டு: அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி  குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் தண்துறை  ஊரன் பெண்டினையாயின், நின் நெஞ்சிற் படர் பலவாகுக ! ஓவாது ஈயும்  மாரி வண்கைக் கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி(யின்கொன்முனை இரவு ஊர் போலநீ துஞ்சு நாளே சிலவாகுக !

அருஞ்சொற்பொருள்: அரில் =  பின்னிக் கிடத்தல்; பவர் = அடர்ந்த கொடி; பிரம்பு = ஒரு கொடி; குண்டு = ஆழம்; இலஞ்சி = குளம்; கெண்டை =  ஒருவகை மீன்; கதூஉம் = கவ்வும்; தண்டுறை = தண் + துறை = குளிர்ந்த நீர்த்துறை; பெண்டு = மனைவி; படர் = துன்பம்; ஓவாது = ஒழியாது (இடைவிடாது); மாரி = மேகம்; வண்கை = வண்மையுடைய கை; பகடு = யானை, எருமை, பசு இவற்றின் ஆண்; அஞ்சி = அதியமான் நெடுமான் அஞ்சி; கொன்முனை = கொன் + முனை; கொன் = அச்சம்; முனை = போர்முனை; துஞ்சுதல் = தூங்குதல்.

உரை: ஒன்றோடு ஒன்றாகப் பின்னிக் கிடக்கும் அடர்ந்த பிரப்பங்கொடியில் விளைந்த, புறத்தே வரிகளையுடைய  பழத்தை, ஆழமான நீரையுடைய குளத்தில் உள்ள கெண்டைமீன் கவ்வும் இடமாகிய குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய ஊர்த் தலைவனின் மனைவியாக நீ உன்னைக் கருதினால், உன் உள்ளத்தில் துன்பங்கள் பலவாக ஆகுக ! இடைவிடாது, மேகம் போல் கைம்மாறு கருதாத வள்ளல் தன்மை மிகுந்த கையையும், விரைந்து செல்லும் யானைகளையும், நெடிய தேர்களையும் உடைய அதியமான் நெடுமான் அஞ்சியின் அச்சம் தரும் போர்க்களத்தின் அருகில் உள்ள ஊர்மக்கள், எப்படி இரவில் உறங்காமல் இருப்பார்களோ அதுபோல் நீ உறங்கும் நாட்களும் சிலவே ஆகுக.


சிறப்புக் குறிப்பு: பிரப்பங்கொடியில் பழுத்து முதிர்ந்த பழத்தைக் கெண்டை கவ்வும் என்றது தலைவனை எளிதில் கவர்ந்துகொள்ளும் பரத்தையை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.

No comments:

Post a Comment