Sunday, February 21, 2016

155. தலைவி கூற்று

155. தலைவி கூற்று

பாடியவர்:  உரோடகத்துக் கந்தரத்தனார்: இப்பெயர், ‘உரோடகத்துக் காரத்தனார்’, ‘ஊரோடகத்துக் கந்தரத்தனார்’, ‘ஒரோடகத்துக் கந்தரத்தனார்என்று பலவாறு பிரதிகளில் உள்ளது. உரைகடம்என்னும் பெயர் உள்ள மூன்று ஊர்கள் செங்கற்பட்டு அருகில் உள்ளதாகவும், ‘உரோடகம்என்பது அவற்றுள் ஒன்றன் திரிபாக இருக்கலாம் என்றும் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும் (155), அகநானூற்றில் மூன்று பாடல்களும் (23, 95, 191), நற்றிணையில் நான்கு பாடல்களும் (116, 146, 238, 306) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: தலைமகள் பருவங்கண்டு அழிந்து சொல்லியது.

கூற்று விளக்கம்:தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். ”கார்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லையே!” என்று தலைவி தோழியிடம் வருத்தத்தோடு கூறுகிறாள்.

முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி
மரம்பயில் இறும்பி னார்ப்பச் சுரனிழிபு
மாலை நனிவிருந் தயர்மார்
தேர்வரும் என்னும் உரைவா ராதே. 

கொண்டு கூட்டு: முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந்தன்று; மெழுகு ஆன்று, ஊது உலைப் பெய்த, பகுவாய்த் தெண்மணி, மரம்பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரன் இழிபு, மாலை நனிவிருந்து அயர்மார்;
தேர்வரும் என்னும் உரை வாராதே. 

அருஞ்சொற்பொருள்: முதை = பழைய; புனம் = கொல்லை, வயல்; ஆர்கலி = ஆரவாரம்; வட்டி = பனை ஒலையினால் செய்யப்பட்ட பெட்டி; போது = மலரும் பருவத்தில் உள்ள அரும்புபொதுளுதல் = நிறைதல்; பகுவாய் = பிளந்த வாய்; தெண்மணி = தெளிந்த ஓசையையுடைய மணி; பயிலல் = பிடித்தல் ( நெருங்குதல்); இறும்பு = சிறுகாடு; ஆர்ப்ப = ஒலிக்க; சுரன் = பாலை நிலம்; இழிபு = கடந்து; நனி = மிகுதி; அயர்தல் = செய்தல், விளையாடுதல்.

உரை: பழைய கொல்லையை உழுத, ஆரவாரத்தையுடைய உழவர்கள், காலையில் விதைக்கும் பொருட்டு விதையை எடுத்துச் சென்ற சிறிய பனையோலைப் பெட்டிகளில், விதைகளை விதைத்து விட்டு வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது மலர்களை நிறைத்துக் கொண்டுவரும் மாலைப்பொழுது வந்தது. மெழுகால் செய்த அச்சில் அமைத்து, ஊதுகின்ற கொல்லனுடைய உலையில்  பெய்து செய்யப்பட்ட  பிளந்த  வாயையுடைய தெளிந்த ஓசையையுடைய மணிகள், மரங்கள் நெருங்கி வளர்ந்த சிறிய காட்டில் ஒலிக்கும்படி, அரிய வழியைக் கடந்து, மாலைக்காலத்தில் அவருக்காக நல்ல விருந்து ஒன்றை நாம் அளிக்குமாறு  தலைவருடைய தேர் வருகின்றது என்ற சொல் இன்னும் வரவில்லையே.


சிறப்புக் குறிப்பு: முதைப்புனம் என்றது பழைய கொல்லையில் உள்ள மரங்களை வெட்டி விளைநிலமாக்கிய இடத்தைக் குறிக்கிறது. விதை விதைக்கும் காலம் என்றதால் கார்காலம் வந்தது என்பது தெரிகிறது.  பிரிந்து சென்ற தலைவர் திரும்பிவந்தவுடன் அவர் மகிழுமாறு அவருக்கு நல்ல விருந்து வைப்பது மரபு.

No comments:

Post a Comment