Sunday, February 21, 2016

156. தலைவன் கூற்று

156. தலைவன் கூற்று

பாடியவர்: பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (373) குறுந்தொகையில் ஒருபாடலும் (156) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் (தோழனுக்குத்) கிழவன் (தலைவன்) அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது  மிகுந்த அன்போடு, எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறான். தலைவனின் நிலையைக் கண்ட தோழன்எப்போழுதும் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறாயே!” என்று தலைவனைக் கண்டிக்கிறான். அதற்குத் தலைவன் நீ கற்ற வேதங்களில், பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்து இருந்தால் எனக்குக் கூறுக. இல்லையேல், நீ என்னைக் கடிந்துரைப்பதில் என்ன பயன்?” என்று கேட்கிறான்.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

கொண்டு கூட்டு: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனேசெம்பூ முருக்கின் நல்நார் களைந்து, தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? இது மயலோ?

அருஞ்சொற்பொருள்: செம்பூ = செந்நிறமான பூ; முருக்கு = புரச மரம்; நார் = பட்டை; கமண்டலம் = பிடியுள்ள செம்பு; படிவம் = விரதம்; படிவ உண்டி = விரத உணவு; கற்பு = கல்வி, நீதிநெறி; எழுதாக் கற்பு = வேதம்; மயல் = மயக்கம்.

உரை: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!  சிவந்த பூவையுடைய புரச மரத்தினது, நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய, தாழ்கின்ற கமண்டலத்தையும் விரத உணவையுமுடைய, பார்ப்பன மகனே! வேதத்தையறிந்த உன்னுடைய சொற்களுள், பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய மருந்தும் உளதோ? அது இல்லாவிட்டல், நீ என்னைக் கடிந்துரைப்பது உன் அறிவின் மயக்கமோ!

சிறப்புக் குறிப்பு: கற்பு என்ற சொல்லுக்கு கல்வி அல்லது நீதிநெறி என்று பொருள் கொள்ளலாம். பழங்காலத்தில், வேதம் எழுதப்படாமல் வாய்வழியாக ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டதால், அதுஎழுதாக் கற்புஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment