Sunday, February 21, 2016

157. தலைவி கூற்று

157. தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: பூப்பெய்திய தலைமகள் உரைத்தது.
கூற்று விளக்கம்: பூப்பு எய்திய தலைவி, அதை வெளிப்படையாகக் கூற விரும்பாமல், “கோழி கூவியது. பொழுதும் விடிந்தது. இனி, அடுத்த சில நாட்களுக்குத் தலைவரோடு படுத்து இன்பம் நுகரமுடியாதேஎன்று நினைத்து வருந்துகிறாள்.


குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூஉ நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே. 

கொண்டு கூட்டு: குக்கூ என்றது கோழி.  அதன் எதிர் தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்று என என் தூஉ நெஞ்சம் துட்கு என்றன்று.

அருஞ்சொற்பொருள்: கோழி = சேவற்கோழி; துட்கு = அச்சம்; தூ = தூய்மை; தோய்தல் = கலத்தல் (தழுவுதல்); வைகறை = விடியற்காலம்.

உரை: கோழி குக்கூவென்று கூவியது. அதைக் கேட்டவுடன், விடியற் பொழுது வந்தது என்பதை நான் உணர்ந்தேன். என் தலைவர் என் தோளைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தார். வாளால் ஒரு பொருளை வெட்டினால் அது எப்படிப் பிளவுபடுமோ, அதுபோல், அந்த விடியற் காலம், தோளைத் தழுவியிருந்த என் தலைவரை, என்னிடம் இருந்து பிரியச்செய்யும் என்று என் மாசற்ற மனம் அஞ்சியது.

சிறப்புக் குறிப்பு: பெண்கள் பூப்பெய்திய பிறகு மூன்று நாட்களுக்கு அவர்கள் வீட்டில் உள்ள மற்றவர்களைத் தொடாமல் விலகி இருப்பார்கள். அவ்வாறு விலகி இருக்கும்பொழுது கணவனுடன் படுத்து உறங்க மாட்டர்கள். கோழி கூவியவுடன் தலைவி விழித்துக் கொண்டாள். தான் பூப்பெய்தியதை உணர்ந்தாள். இனி மூன்று நாட்களுக்குக் கணவனோடு உறங்க முடியாது என்பதை எண்ணி வருந்துகிறாள் என்று பொருள் கொள்ளலாம்.  ”கோழி கூவியதுஎன்பது  இடக்கரடக்கலாகப் (சொல்லத்தகாதவற்றை மறைத்துச் சொல்லுவது) பூப்பெய்தியதைக் குறிக்கும் மரபுத் தொடராக இருந்திருக்கலாம். ஆகவே, தான் பூப்பெய்தியதை அறிந்த தலைவி, இனி மூன்று நாட்களுக்குக் கணவனோடு உடலுறவுகொண்டு இன்பம் நுகரமுடியாது என்று எண்ணித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துவதாக இபாடலுக்குப் பொருள் கொள்ளலாம்.


பூப்பெய்தியதைத் தொடர்பு படுத்தாமலும் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்அதாவது, கணவன் தோளைத் தழுவி, இன்பமாக உறங்கிக் கொண்டிருந்த தலைவி, பொழுது விடிந்ததால், இனி கணவனைத் தழுவிகொண்டு உறங்கமுடியாதே என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் இப்பாடலுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளலாம்

No comments:

Post a Comment