Sunday, February 21, 2016

159. தோழி கூற்று

159. தோழி கூற்று

பாடியவர்: வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று - 1: தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது.
 கூற்று - 2: உயிர் செல வேற்றுவரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்.
கூற்று விளக்கம் -1:  தலைவியும் தலைவனும் தங்கள் காதலைக் களவொழுக்கத்தில் தொடர்ந்து வந்தார்கள். ஒருநாள் தலைவியின் பெற்றோர்கள் அவளை வீட்டில் காவலில் வைத்தார்கள். வழக்கம்போல், அவளைக் காண வந்த தலைவன், தலைவியின் வீட்டுக்கு வெளியே உள்ள வேலிக்கு அருகில்  நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவன் காதுகளில் விழுமாறு தோழிதலைவி காவலில் வைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வூரில் உள்ள அறிவில்லாத மக்கள் அவள் துயரத்தை உணராதவர்களாக உள்ளனர்என்று கூறுகிறாள். இவ்வாறு கூறுவதால் தலைவியின் நிலையை உணர்ந்து, தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழி எதிர்பார்க்கிறாள்.

கூற்று விளக்கம் - 2: தலைவி திருமணத்திற்கான பருவம் அடைந்தாள். அவளுடைய திருமணத்தைப் பற்றி, அவள் பெற்றோர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்அவளுடைய பெற்றோர்கள் அவளைத் தலைவன் அல்லாத வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்வித்தால், அவள் நிலை என்ன ஆகும்? அவள் உயிரையே விட்டுவிடுவாள். அவளுடைய துயரத்தை அறியாத இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள். தலைவன் இதை உணர்ந்து, அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சிகளை விரைவில் எடுக்க வேண்டும் என்று மறைமுகமாகத் தலைவி தோழியிடம், தலைவன் காதில் கேட்குமாறு கூறுவதாகவும் இப்பாடலைக் கருதலாம்

இந்த இரண்டு கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கருதுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஒருபெண் தன்னுடைய இடையைப் பற்றியும் மார்பகங்களைப் பற்றியும் தானே பெருமையாகப் பேசமாட்டாள்.  ஆகவே, இப்பாடலைத் தோழியின் கூற்றாகக் கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. தலைவி காவலில் வைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவளுடைய பெற்றோர்கள் அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்விக்கக் கூடும் என்ற கருத்தையும் தோழியே கூறுவதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறதுது.

தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே. 

கொண்டு கூட்டு: தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, அம்மெல் ஆகம்  நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின;
இப்பேதை  ஊர் பூங்குழை யாங்கு ஆகுவள்கொல் என்னும் அவல நெஞ்சமொடு உசாவா
கவலை மாக்கட்டு.

அருஞ்சொற்பொருள்: அல்குல் = அடிவயிறு, இடை; தாங்கல் செல்லா = பொறுத்துக்கொள்ள முடியாத; நுழை = நுண்மை; நுசுப்பு = இடை; எவ்வம் = துன்பம்; ஆகம் = மார்பு; வீங்கி = பருத்து; கொம்மை = திரட்சி, பெருமை; வரி = தேமல்; செப்பு = சிமிழ், ஒருவகைப் பாத்திரம்; எதிர் = ஒப்பு; பூங்குழை = காதில் அணிகின்ற பூப்போன்ற அனிகலன்;  அவலம் = கவலை; உசாவுதல் = கேட்டல், ஆராய்தல்; மாக்கட்டு = மக்களை உடையது; பேதைமை = அறிவின்மை.

உரை: தான் அணிந்திருக்கும் தழையாடையைக் கூடத் தாங்க முடியாத நுண்மையான சிறிய இடைக்குத் துன்பம் உண்டாகும்படி, இந்தப் பெண்ணின் அழகிய மெல்லிய மார்பில், மிகுதியாகப் பருத்து, திரண்டு உருண்டு தேமலோடுகூடிய முலைகள் செப்பைபோல் (குவிந்த பாத்திரங்களைப் போல்) உள்ளன. ”காதில் பூப்போன்ற அணிகலன்களை அணிந்த இந்தப் பெண் எத்தகைய நிலையை அடைவாளோ?”, என்று கவலையோடு கேட்காத மக்களை உடையது இந்த அறிவற்ற ஊர்

சிறப்புக் குறிப்பு: பேதை ஊர்என்றது அவ்வூரில் வாழும் அறிவற்ற மக்களைக் குறிக்கிறது என்றாலும், தோழி செவிலித்தாய் போன்றவர்கள் தனது காதலை உணர்ந்து தன்னைத் தலைவனுக்கு த் திருமணம் செய்விப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதனால் அவளுக்கு அவர்கள் மீது உள்ள சினத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

நலம்புனைத்துரைத்தல்என்ற அதிகாரத்தில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுவதைத் திருவள்ளுவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறார். அந்த அதிகாரத்தில் உள்ள ஒருபாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.                                                  (குறள் – 1115)

(பொருள்: இவள் தன் இடையின் மென்மையைக் கருதாது, அனிச்சப்பூவின் காம்பைக் கிள்ளாமல் தன் தலையில் அணிந்தாள். காம்போடு கூடிய அந்தப் பூவின் எடையைத் தாங்காமல் இவள் இடை முறிந்துவிடும். ஆதலால், இனி இவள் இடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா. அமங்கலப் பறைகளே முழங்கும்.)

No comments:

Post a Comment