Sunday, November 20, 2016

268. தோழி கூற்று

268. தோழி கூற்று

பாடியவர்: கருவூர்ச் சேரமான் சாத்தனார். இவர் இயற்றியதாக ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தலைவன், நள்ளிரவிலும், இடியும் மழையும் இருந்தாலும் தவறாது வந்து தலைவியைச் சந்திக்கிறான். இருவரும் கூடி மகிழ்கிறார்கள். இவ்வாறு களவொழுக்கத்தைத் தொடர்வதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. தலைவன் இரவில் வந்தால் அவனுக்குக் கொடிய விலங்குகளாலும் இடி, மழை போன்றவற்றாலும் இன்னல்கள் நேரிடலாம் என்று தலைவியும் தோழியும் அஞ்சுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், களவொழுக்கம் நீடித்தால், அது ஊராருக்குத் தெரியவரும். ஊராருக்குத் தெரிந்தால் அவர்கள் அலர் பேசுவார்கள். தலைவியின் பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் அவளைக் கடுமையான காவலில் வைக்கலாம்தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டால் இந்த இன்னல்கள் எல்லாம் இல்லாமற் போகும். அதுவே சிறந்தது என்ற முடிவுக்குத் தலைவியும் தோழியும் வருகிறார்கள். தலைவனிடம் நேரிடையாகத் திருமணத்தைப் பற்றி பேச முடியாது. ஆகவே, ஒருநாள் இரவு, தலைவன் தலைவியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் பொழுது, “தலைவன் வந்து உன் தோளைத் தழுவி, நீங்கள் இன்புற்றாலும், அவன் இவ்வாறு இரவில் வருவதில் பல இன்னல்கள் உள்ளனவே! அவனை வரச்சொல்லவும் தயக்கமாக இருக்கிறது. வந்தால் போகச் சொல்லுவதற்கும் தயக்கமாக இருக்கிறது.” என்று அவன் காதுகளில் விழுமாறு தோழி கூறுகிறாள். அவள் சொல்லுவதைக் கேட்டால் தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழியும் தலைவியும் நினைக்கிறார்கள்.

சேறிரோ எனச் செப்பலு மாற்றாம்
வருவி ரோஎன வினவலும் வினவாம்
யாங்குச் செய்வாங்கொல் தோழிபாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: தோழி! பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்துநெடுமென் பணைத்தோள் அடைந்திசினோர். ”சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம்; ”வருவிரோஎன வினவலும் வினவாம்யாங்குச் செய்வாங்கொல்?

அருஞ்சொற்பொருள்: சேறீரோ = செல்கின்றீரோ; செப்புதல் = கூறுதல்; ஆற்றாம் = இயலாதவராக இருக்கிறோம்; வினவுதல் = கேட்டல்; வினவாம் = கேட்க மாட்டோம்; யாங்கு = எவ்வாறு; கொல்அசைச்சொல்; பை = படம்; துமித்தல் = துண்டித்தல்; ஏறு = இடி; நடுநாள் = நள்ளிரவு; பணை = மூங்கில்.


உரை:    தோழி! படத்தை உடைய பாம்புகளின் பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய, நடுஇரவு என்றுகூட எண்ணிப் பார்க்காமல், இங்கு வந்து, நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற உன் தோள்களைத் தழுவிய தலைவரிடம், ”செல்கின்றீரோ என்று,  சொல்லுவதற்கு வலிமை இல்லாதவர்களாக இருக்கின்றோம்.   ”சென்றால் மீண்டும் வருவிரோ என்று கேட்கவும் முடியவில்லை. என்ன செய்வது?

1 comment:

  1. அடைந்திசினோரே == அடைந்து + இச்சி + னாரே/னோரே?

    ReplyDelete