Sunday, November 20, 2016

274. தலைவன் கூற்று

274. தலைவன் கூற்று

பாடியவர்: உருத்திரனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று : பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள்தேடச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறான். தான் செல்லவிருக்கும் பாலைநிலத்தின் கொடுமைகள் அவன் மனக்கண் முன்னே தோன்றுகின்றன. அப்பொழுது, அவன் தன் நெஞ்சை நோக்கி, “நாம் செல்லப் போகும் காட்டு வழி கொடுமையனதுதான். அங்கு வழிப்பறிக் கள்வர்கள் இருப்பார்கள். தாகம் எடுத்தால் குடிப்பதற்குத் தண்ணீர்கூடக் கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும், என் காதலியின் உடல் அழகை நினைத்துக்கொண்டு சென்றால், கொடுமையான காடும் இனியதாகும்.” என்று கூறுகிறான்.

புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்
காசினை யன்ன நளிகனி யுதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும்
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு
மணிமிடை யல்குல் மடந்தை
அணிமுலை யாக உள்கினஞ் செலினே. 

கொண்டு கூட்டு: பொன்னொடு மணிமிடை அல்குல் மடந்தை அணிமுலை ஆகம் உள்கினம் செலின்புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅயின் காசினை அன்ன நளிகனி உதிர விடுகணை வில்லொடு பற்றி, கோடு இவர்புவருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்,
நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும் இன்னாக் கானமும் இனிய.

அருஞ்சொற்பொருள்: புறவு = புறா; புறத்தன்ன = முதுகைப் போன்ற; கால் = அடிமரம்; புன்கால் = மென்மையான அடிப்பக்கம்; உகாய் = ஒருவகை மரம்; காசு = மணி; நளி = செறிந்த; கோடு = உச்சி; இவர்தல் = ஏறுதல்; இவர்பு = ஏறி; வன்கண் = இரக்கமற்ற தன்மை; நார் = மரப்பட்டை; நசை= விருப்பம்; வேட்கை = பற்றுள்ளம்; நீர் வேட்கை = தாகம்; ஆகம் = மார்பு; உள்குதல் = நினைத்தல்.

உரை: (நெஞ்சே!) பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகலன்களை அணிந்த இடையை உடைய தலைவியின், அழகிய முலைகளை உடைய மார்பை  நினைத்துக்கொண்டு  சென்றால், புறாவின் முதுகைப் போன்ற மென்மையான  அடிப்பக்கத்தை உடைய உகாய் மரத்தின், மணியைப் போன்ற, செறிந்த பழங்கள் உதிரும்படி, விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து, உயர்ந்த இடத்தின் மேல் ஏறி, வழியிலே வருபவரைப் பார்க்கும் ஆறலைக் கள்வர்,  தமது நீர் வேட்கையினால்  மரப்பட்டையை மென்று அந்த வேட்கையைத் தணித்துக் கொள்ளும் துன்பம் தருகின்ற காடும் நமக்கு இனியதாகும்.

No comments:

Post a Comment