Sunday, December 4, 2016

275. தோழி கூற்று

275. தோழி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்றத் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்தது. அங்கு ஒரு மணியோசை கேட்கிறது. அது தலைவனின் தேர் ஓசையா என்று பார்த்து வருவோம் என்று தோழி, தலைவியை அழைக்கிறாள்.

முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. 

கொண்டு கூட்டு: தோழி! ஆண்டு இயம்பிய உள. எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் புல்ஆர் நல்ஆன் பூண்மணி கொல்லோசெய்வினை முடித்த செம்மல் உள்ளமொடுவல்வில் இளையர் பக்கம் போற்றஈர்மணற் காட்டாறு வரூஉம் தேர்மணி கொல்? முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் கண்டனம் வருகம்; சென்மோ.

அருஞ்சொற்பொருள்ஆண்டு = அங்கே; உயர் = மேல் (உயர்ந்த இடம்) ; கண்டனம் = கண்டு; வருகம் = வருவோம்; எல் = மாலை நேரம்; ஏறு = காளை; ஆர்தல் = உண்ணுதல்; செம்மல் = உள்ள நிறைவு; போற்றுதல் = பாதுகாத்தல்; இயம்புதல் = ஒலித்தல்.

உரை: தோழி! அங்கே மணியோசை ஒலிக்கிறது. அது, மாலை நேரத்தில் ஊரை வந்து அடையும், காளைகளுடன்கூடிய பசுக்களின் கூட்டத்தில் உள்ள, புல்லை உண்ட நல்ல பசுக்கள் கழுத்தில் அணிந்துள்ள மணி ஓசையோ? அல்லது தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்து முடித்த நிறைவான உள்ளத்தோடு, வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன் அருகிலிருந்து பாதுகாக்க, ஈரமான மணலை உடைய காட்டு வழியிலே வரும், தலைவரின் தேரில் பூட்டிய  மணி ஓசையோ? முல்லைக்கொடி படர்ந்த குன்றின்மேல் ஏறிக் கண்டு வருவேம்: வருவாயாக!

No comments:

Post a Comment