Sunday, December 4, 2016

279. தலைவி கூற்று

279. தலைவி கூற்று 
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 77 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துகொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். ”அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுமையாக இரு.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “என்னால் அவர் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் அவருடைய பிரிவு என்னை மிகவும் வருத்துகிறது.” என்று தோழியிடம் கூறுகிறாள்

திரிமருப் பெருமை யிருணிற மையான்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி
புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும்
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ
மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல்
துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகித்
திருந்திறைப் பணைத்தோள் உள்ளா தோரே. 

கொண்டு கூட்டு: மழை கழூஉ மறந்த மாஇரும் துறுகல்துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் இரும்பல் குன்றம் போகித் திருந்துஇறைப் பணைத்தோள் உள்ளாதோர், திரி மருப்பு எருமை இருள்நிற மைஆன் வருமிடறு யாத்த, பகுவாய்த் தெள்மணி புலம்புகொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் இது பொழுது ஆகவும் வாரார் கொல்லோ

அருஞ்சொற்பொருள்: திரி = முறுக்கிய; மருப்பு = கொம்பு; மை = கரிய; மையான் = மை + ஆன் = எருமை; வரு = வளரும்; மிடறு = கழுத்து; யாத்த = கட்டிய; பகுவாய் = பிளந்த வாய்; தெண்மணி = தெளிவாய் ஒலிக்கும் மணி; புலம்பு = தனிமைத் துன்பம்; யாமம் = நடு இரவு; இயங்குதல் = நடத்தல்; கொல் அசைச்சொல்; மா = பெரிய; துறுகல் = பாறை (குண்டுக்கல்); துகள் = தூசி (புழுதி); இரு = பெரிய; திருந்துதல் = ஒழுங்காதல்; இறை = முன்கை; பணை = மூங்கில்.
உரை: தோழி , மழை கழுவுதலை மறந்த (மழையால் கழுவப்படாத) பெரிய குண்டுக்கல்,  புழுதி படிந்த யானையைப் போல் தோன்றுகின்ற, பல பெரிய மலைகளை நம் தலைவர்  கடந்து சென்றார். அத்தகைய வழியில் சென்றவர் எனது அழகிய முன்கையையும், மூங்கிலைப் போன்ற என் தோள்களையும்  நினைத்துப் பார்க்கவில்லை. முறுக்கிய கொம்பையும் இருள்போன்ற கரிய நிறத்தையும் உடைய எருமையினது, வளர்கின்ற கழுத்தில் கட்டப்பட்ட,  பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது,  தனிமையைக் கொண்ட நடு இரவில், அவ்வெருமை நடக்கும் தோறும் ஒலிக்கின்ற,  இக் காலம் தாம் வருதற்குரிய காலமாக இருந்தும், அவர் வரவில்லை.

சிறப்புக் குறிப்பு: மழைகழூஉ மறந்த துறுகல்என்றது மழையின்றி வெப்பம் மிகுதியான பாலை நிலத்தைக் குறிக்கிறது. நள்ளிரவில் தலைவி உறங்காமல் இருப்பதால், தனிமையை நினைத்துபுலம்புகொள் யாமம்என்று கூறுகிறாள். யானை தன்மீது தானே புழுதியை வாரித் தூற்றிக் கொள்ளும் இயல்புடையது என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment