Sunday, March 19, 2017

326. தலைவி கூற்று

326. தலைவி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் தலைவியின் வீட்டுக்கு வந்து, வேலிக்கு வெளியே, மறைவான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பது  தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். ”தலைவன் ஒருநாள் என்னைப் பிரிந்தால்கூட, எனக்கு அதனால் உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகிறது.” என்று தலைவி தலைவனுக்குக் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்.

துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. 

கொண்டு கூட்டு: தோழி! துணைத்த கோதைப் பணைப் பெருந்தோளினர் கடலாடு மகளிர் கானல் இழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்புதுறைவன் ஒருநாள் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து

அருஞ்சொற்பொருள்: துணைத்த = இரண்டிரண்டு மலர்களாக வைத்துக்  கட்டிய; கோதை = மாலை; பணை = மூங்கில்; கானல் = கடற்கரைச் சோலை; இழைத்த = செய்த; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; துறப்பின் = பிரிந்தால்; இன்னாமைத்து = துன்பத்தை உடையது.
உரை: தோழி! இரண்டிரண்டு மலர்களாக வைத்துக் கட்டிய மாலையை அணிந்த, மூங்கிலைப் போன்ற, பருத்த தோளையுடைய, கடல்நீரில் விளையாடும் மகளிரோடு சேர்ந்து, கடற்கரைச் சோலையிலே சிறிய மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்த பொழுது,  நான் நெய்தல் நிலத்தலைவனைக் கண்டு கூடிய நட்பு, அத்தலைவன் ஒருநாள் என்னைப் பிரிந்தால்,  பல நாட்ளுக்குத் தொடர்ந்துவரும் துன்பத்தைத் தருவதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு: பிரிவு நேராத வண்ணம், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தலைவி தலைவனுக்குக் குறிப்பாக உணர்த்துகிறாள்.

No comments:

Post a Comment