Sunday, April 26, 2015

பாடல் - 11

11. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: மாமூலனார். இவர் அகநானூற்றில் 27 பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் (11), நற்றிணையில் இரண்டு பாடல்களும் இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தலைவன் தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள ஒரு நாட்டிற்குச் சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வாடுகிறாள். இனியும் அவனைப் பிரிந்திருந்து, அவன் வருவான் என்று காத்திருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். “இவ்வாறு இங்கிருந்து வருத்தப்படுவதைவிட, தலைவன் இருக்கும் இடத்திற்கே செல்வது சிறந்ததுஎன்று தன் தோழியின் காதில் விழுமாறு தனக்குத் தானே தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. 

அருஞ்சொற்பொருள்: கோடு = சங்கு; ஈர்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; ஞெகிழல் = நெகிழல் (தளர்தல்) ; பாடுதல் = பொருந்துதல் ; கலிழ்தல் = அழுதல்; புலம்பு = தனிமை, வருத்தம்; ஈங்கு = இப்படி ; இவண் = இங்கே ; உறைதல் = தங்குதல் ; உய்தல் = தப்புதல்; இனி = இப்பொழுது; முனாது = முன்னே; குல்லை = துளசி அல்லது வெட்சி அல்லது கஞ்சங் குல்லை எனப்படும் செடிவகைகளில் ஒன்று; கண்ணி = தலைமேற் சூடப்படும் மாலை ; வடுகர் = தெலுங்கர்; முனை = போர்க்களம் (இடம்); கட்டி = ஒருவன் பெயர்; உம்பர் = அப்புறம்; பெயர்தல் = வேறுபடல்; தேயம் = நாடு; மொழிபெயர் தேயம் = வேறுமொழி வழங்கும் நாடுவழிபாடு = வழியிற் செல்லுதல் ; சூழ்ந்திசின் = எண்ணினேன்.

உரை: எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! உடல் மெலிவினால், சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளையல்கள் நெகிழ, நாள்தோறும், தூக்கமில்லாமல் கலங்கி அழும் கண்களோடு, தனிமையில் வருந்தி, இப்படி இங்கேயே தங்கியிருப்பதைத் தவிர்த்து, தலைவர் இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு இப்பொழுதே எழுவாயாக; முன்னே உள்ளதாகிய, குல்லையாலாகிய கண்ணியை அணிந்த, வடுகருக்குரிய இடத்திலுள்ள, பல வேற்படையையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள வேறுமொழி வழங்கும் வடுகர் நாட்டில் இருந்தாலும், அவர் இருக்கும் நாட்டிற்கு செல்லலாம் என்று எண்ணினேன்.


விளக்கம்: வேங்கடத்தின் வடக்கே இருந்த ஒரு நாட்டைச் சார்ந்தவர் வடுகர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மிக்க வீரமும் வன்மையும் உடையவராகக் கருதப்பட்டனர்கட்டி என்பவன் சேரனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன். அவன் தமிழ்நாட்டிற்கு வடக்கே இருந்த கங்க நாட்டிற்குத் தலைவனாகக் கருதப்படுகின்றான். கங்க நாடு தமிழ்நாட்டிற்கும் வடுகர் நாட்டிற்கும் இடையில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  மொழி வேறுபட்ட நாட்டில் சென்று வாழ்தல் அருமையாதலின் ஆயினும் என்று சிறப்பும்மையுடன் கூறப்பட்டது. இப்பாடலில், பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாகிய பிரிதல் குறிப்பிடப்பட்டிருக்கிறது

No comments:

Post a Comment