Tuesday, April 14, 2015

பாடல் - 5

5. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: நரிவெரூஉத்தலையார். இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும், இவர் நரிவெரூஉத்தலை என்னும் ஊரினர் என்ற காரணத்தால் இவருக்கு இப்பெயர் வந்ததென்றும், இவர் இயற்றிய பாடல் ஒன்றில்நரிவெரூஉத்தலைஎன்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும் இவர் பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றனஇவர் இயற்பெயர் தெரியவில்லைஇவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களும்  (5, 195) குறுந்தொகைகயில் இரண்டு பாடல்களும் (5, 236) இயற்றியுள்ளார்இவர் பாடல்கள் கருத்துச் செறிவு உடையவை.

பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்திருப்பதால், தலைவி மிகுந்த வருத்தமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவியைக் காண வருகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, தலைவிக்கு ஆறுதலாக அன்றிரவுப் பொழுதை அவளோடு கழிக்கலாம் என்று எண்ணித் தலைவியோடு தங்குகிறாள். இரவு நேரம் வந்தவுடன், தலைவியும் தோழியும் தூங்கப் போகிறார்கள். தோழி விரைவில் உறங்கிவிட்டாள். தலைவி உறக்கமின்றி வாடுகிறாள். தற்செயலாகக் கண்விழித்த தோழி , தலைவி தூங்காமல் இருப்பதைப் பார்த்து, “இவ்வளவு நேரமாகிவிட்டதே! நீ இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்கிறாள். தோழியின் கேள்விக்குத் தலைவி மறுமொழி கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. 

அருஞ்சொற்பொருள்: வதி = தங்குமிடம்; குருகு = நாரை, கொக்கு ; புன்னை = புன்னை மரம்; திரை = அலை; திவலை = சிதறும் நீர்த்துளி ; அரும்பும் = மலரச் செய்யும்; தீநீர் = இனிமையான நீர் ; அம் = அழகிய; புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன் ; பிரிந்தென = பிரிந்ததால்; பல்லிதழ் = பல இதழ்கள்; உண்கண் = மை தீட்டிய கண்கள்; பாடு = தூக்கம் ; ஒல்லுதல் = பொருந்துதல்.

உரை: தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குவதற்கேற்ற இனிய நிழலைத் தரும் புன்னைமரங்களை, கரையை மோதும் அலைகளிலிருந்து சிதறும் இனிய நீர்த்துளிகள் மலரச் செய்கின்றன. அத்தகைய நெய்தல் நிலத்தின் தலைவன் என்னைப் பிரிந்ததால், பல இதழ்களை உடைய தாமரை மலரைப் போன்ற என்னுடைய மை தீட்டிய கண்களால் தூங்க முடியவில்லை. தோழி! இதுதான் காதல் நோயா


விளக்கம்: முதற்பொருளாக நெய்தல் நிலமும், உரிப்பொருளாகத் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் இரங்கலும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் நெய்தற் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. தலைவியை பிரிந்திருந்தபொழுதும், நெய்தல் நிலத்தில் உள்ள குருகுகள் இனிமையாக உறங்குவதைப்போல் தலைவன் வருத்தப்படாமல் உறங்குகிறான் போலும் என்ற குறிப்பு இப்பாடலில் உள்ளுறை உவமமாகக் காணப்படுகிறது

No comments:

Post a Comment