Sunday, April 26, 2015

பாடல் - 12

12. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஓதலாந்தையார். இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (12, 21, 329) ஐங்குறுநூற்றில் பாலைத்திணைக்குரிய 100 பாடல்களும் இயற்றியவர்.

பாடலின் பின்னணி: தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்றுகொண்டிருந்தான். அவன் பாலை நிலத்தைக் கடக்கும்பொழுதுஎத்துணைத் துன்பப்படுகிறானோ என்று எண்ணித் தலைவி வருந்துகிறாள். தலைவனின் பிரிவைவிட, பாலைநிலத்தில் அவன் படும் துன்பம்தான் அவளை மிகவும் வருத்தியது. அவள் வருத்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட அவ்வூர் மக்கள், அவள் தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்துவதாக நினைத்து அவளைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 

அருஞ்சொற்பொருள்: எறும்பி = எறும்பு; அளை = வளை; குறுமை = சிறுமை; சுனை = நீரூற்று, குளம் ; உலைக்கல் = கொல்லனுடைய உலைக்கலத்திலுள்ள பட்டடைக் கல்; கொடு = வளைவு; எயினர் = பாலைநில மக்கள், வேடர்; பகழி = அம்பு; மாய்தல் = அழிதல் (தீட்டுதல்); கவலை = கவர்த்த வழிகள் (பிரியும் வழிகள்); ஆறு = வழி ; அவலம் =வருத்தம், துன்பம்; நொதுமல் = அன்பில்லாதவர்கள் கூறும் சொற்கள்; கழறுதல் = சொல்லுதல் (இடித்துரைத்தல்); = இந்த; அழுங்கல் = ஒலித்தல் (ஆரவாரம்).

உரை: தலைவன் பாலை நிலத்தைக் கடந்து செல்கிறான். அங்கே, எறும்பின் வளைபோன்ற சிறிய நீர்ச்சுனைகளே உள்ளன. கொல்லனுடைய உலைக்களத்திலுள்ள பட்டடைக் கல்லைப் போல் வெப்பம் மிகுந்த பாறைகளின் மேல் ஏறி, வளைந்த வில்லை உடைய வேடர்கள், தங்கள் அம்புகளை, அப்பாறைகளில் தீட்டுகின்றனர். அங்கே, பாதைகள் பலவாகப் பிரிந்து செல்கின்றன. அத்தகைய  பாலை நிலத்தின் கொடுமையை நினைத்து நான் வருந்துகிறேன். இந்த ஆரவாரம் மிகுந்த ஊர், என்னுடைய துயரத்தின் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ளாமல், அன்பில்லாத சொற்களைக் கூறி என்னைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.
.

விளக்கம்: இப்பாடலில், முதற்பொருளாக பாலை நிலமும், கருப்பொருளாக எறும்பு, எயினர்ஆகியவையும் இடம் பெற்றிருப்பதால் இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment