Tuesday, April 14, 2015

பாடல் - 7

7. பாலை - கண்டோர் கூற்று

பாடியவர்: பெரும்பதுமனார். குறுந்தொகையில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.  இவர் புறநானூற்றில் ஒரு செய்யுளும் (199), நற்றிணையில் இரண்டு செய்யுட்களும் (2, 109) இயற்றியுள்ளார்.  இவருடைய பாடல்களில் உவமை நயம் மிகுந்து காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டு, வறண்ட காட்டு வழியாக வேறு ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வில்லேந்திய அந்த ஆடவனும்,மெல்லிய பாதங்களை உடைய அந்தப் பெண்ணும், துன்பப்பட்டு அந்தக் காட்டைக்  கடந்து செல்வதைக் கண்ட சிலர் அவர்களுக்காக இரக்கப்படுகிறார்கள்.

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 

அருஞ்சொற்பொருள்: வில்லோன் = வில்லை உடையவன்; காலன = காலில்; கழல் = வீரத்தின் சின்னாமாக ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (வளையம்); தொடி = வளையல்; அளியர் = இரங்கத் தக்கவர்கள்; கால் = காற்று; பொருதல் = தாக்குதல்; வாகை = ஒரு வகை மரம்; நெற்று = உலர்ந்த பழம்; வேய் = மூங்கில்; பயில்தல் = நெருங்குதல்; அழுவம் = நிலப்பரப்பு; முன்னுதல் = நினைத்தல், எதிர்ப்படுதல்.

உரை: ஆரியக்கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையின் ஒலியைப் போல, காற்று தாக்குவதால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கும் இடமாகிய மூங்கில் செறிந்த இந்த பாலை நிலப்பரப்பை, காலில் கழல் அணிந்த இந்த ஆடவனும் தோளில் வளையலும் தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த இந்தப் பெண்ணும் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இந்த நல்லவர்கள் யாரோ? இவர்கள் இரங்கத்தக்கவர்கள்!

விளக்கம்: சங்க காலத்தில், திருமணமாகாத பெண்கள் காலில் சிலம்பு அணிவதும், திருமணத்திற்குமுன் சிலம்பைக் கழட்டிவிடுவதும் வழக்கமாக இருந்தது. இப்பாடலில், பெண் தன்னுடைய காலில் சிலம்பு அணிந்திருப்பதாகப் புலவர் கூறியதால் அந்தப் பெண் திருமணம் ஆகாதவள் என்பது புலனாகிறது.

இந்தியாவின் வடபகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சிலர் (ஆரியர்கள்) மூங்கில் கம்புகளின் இடையே கட்டப்பட்ட கயிற்றின்மேல் நடந்துகாட்டி மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி கழைக்கூத்து என்று அழைக்கப்பட்டது.  கழைக்கூத்து நடைபெறும்பொழுது பறைகொட்டி ஒலியெழுப்புவது வழக்கம். சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் கழைக்கூத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில், “ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.


இப்பாடலில், முதற்பொருளாக பாலை நிலமும், உரிப்பொருளாகத் தலைவனும் தலைவியும் பிரிந்து செல்வதும் கூறப்படுவதால் இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment