Sunday, August 13, 2017

378. செவிலி கூற்று

378. செவிலி கூற்று

பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது (வழிபட்டது).
கூற்று விளக்கம்: தலைவனுடன் தலைவி உடன்போனதை அறிந்த செவிலித்தாய், தன் மகள் சென்ற வழியில் இன்னல்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்று கடவுளை வணங்குகிறாள்.
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே. 

கொண்டு கூட்டு: நம் நீத்து, சுடர்வாய் நெடுவேல் காளையொடு மடம் மா அரிவை போகிய சுரன்ஞாயிறு காயாது, மரம்நிழல் பட்டுமலைமுதல் சிறுநெறி மணல் மிகத் தாஅய், தண் மழை தலையின்று ஆக

அருஞ்சொற்பொருள்: மலைமுதல் = மலை அடியிலுள்ள; தாஅய் = பரவி; தலைதல் = மழைபெய்தல்; தலையின்று ஆக = பெய்வதாக (இன்றுஅசைச்சொல்);  நீத்து = பிரிந்து; சுடர் = ஒளி; மடம் = அழகு; மா = மாந்தளிர் நிறம்; அரிவை = இளம்பெண் ( இங்கு, தலைவியைக் குறிக்கிறது). வாய், முதல்ஏழாம் வேற்றுமை உருபுகள்.


உரை: நம்மைப் பிரிந்து, ஒளி பொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, அழகையும் மாந்தளிர் போன்ற நிறத்தையும் உடைய தலைவி, சென்ற பாலைநிலத்தில், கதிரவனின் வெயில் படாமல், மரத்தின் நிழல் படிந்து, மலையில் உள்ள சிறிய வழியில், மணல் மிகுதியாகப் பரவி,  குளிர்ந்த மழை பெய்வதாக.

No comments:

Post a Comment