Sunday, August 20, 2017

396. செவிலி கூற்று

396. செவிலி கூற்று

பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட்போக்கிய தாய் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு உடன்சென்றாள். தலைவியின் இளமையையும் பாலைநிலத்தின் வெம்மையையும் நினைத்து, தலைவியின் செவிலித்தாய் வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலைத் தலைவியினுடைய தாயின் கூற்றாகவும் கருதலாம்.

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே.

கொண்டு கூட்டு: பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், விளையாடு ஆயமொடு அயர்வோள், இனிமுளிசினை ஓமை குத்திய, உயர்கோட்டு ஒருத்தல்வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்கழைதிரங்கு ஆரிடை அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: மேவுதல் = விரும்புதல்; அயர்தல் = விளையாடுதல்; முளிதல் = உலர்தல்; சினை = கிளை; ஓமை = ஒருவகை மரம்; கோடு = கொம்பு; ஒருத்தல் = விலங்கேற்றின் பொதுப் பெயர் (இங்கு, ஆண்யானையைக் குறிக்கிறது.); வேனில் = கோடைக்காலம்; வரை = மலை; கவாஅன் = மலையின் அடிவாரம்; மழை = மேகம்; ஓர்க்கும் = கேட்கும்; கழை = மூங்கில்; திரங்குதல் = உலர்தல்; ஆரிடை = கடத்தற்கரிய வழி.

உரை: பாலையும் உண்ணாமல்,  பந்து விளையடுவதையும் விரும்பாமல், முன்னர் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இப்பொழுது, கொடிய பாலை நிலவழியில் சென்றாள். அங்கு, உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தைக் குத்திய, உயர்ந்த கொம்பையுடைய ஆண்யானை, கோடை வெப்பம் மிகுந்த மலையின் அடிவாரத்தில் நின்றுகொண்டு, மேகம் முழங்குகின்ற கடுமையான ஒலியைக்  கூர்ந்து கேட்கும், மூங்கில்கள் வெப்பத்தால் உலர்ந்த, கடத்தற்கரிய இடத்தில்,  தன் காதலனோடு செல்லுதல், எளிமையானது என்று உணர்ந்தாளோ?
சிறப்புக் குறிப்பு: பாலையும் உண்ணாமல், தனக்கு இனிய பந்தையும் விரும்பாமல், மகளிர்க் கூட்டத்தோடு விளையாடும் இயல்புடைய இந்த இளம்பெண் எப்படித் தன் தோழிகளைப் பிரியத் துணிந்தாள்!” என்று தலைவியின் செவிலித்தாய் வருந்துகிறாள்.

ஓமைமரத்தின் பட்டையைக் குத்தி அதிலுள்ள நீரையுண்ண விரும்பிய யானை, அது  உலர்ந்திருந்ததால் வருந்தி, இடியின் ஒலியைக்கேட்டு, மழை பெய்யப் போகிறது போலும்  என்று எண்ணி நின்றது. உலர்ந்த கிளையையுடைய ஓமைமரத்தைக் குத்தி வருந்திய  யானையின் நிலை, மூங்கில் உலர்ந்து இருப்பது ஆகியவை கோடைக்காலத்தின் வெம்மையைக் குறிக்கின்றன.

No comments:

Post a Comment