Sunday, August 20, 2017

397. தோழி கூற்று

397. தோழி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவன்  புறப்பட்டான். அதை அறிந்த தோழி, தலைவனை நோக்கி,  “என் தோழியாகிய தலைவி, உன்னுடைய பாதுகாப்பின் எல்லைக்கு உட்பட்டவள். அவள் துன்பங்களைக்  களைபவர் உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை. அதனால், விரைவில் திரும்பிவந்து, அவளைத் திருமணம் செய்துகொள்வாயாக!” என்று கூறுகிறாள்.

நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்
டன்னா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே.

கொண்டு கூட்டு: நனைமுதிர் ஞாழல் தினைமருள் திரள் வீ நெய்தல் மாமலர்ப் பெய்தல் போலஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்பதாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு அன்னா என்னும் குழவி போல இன்னா செயினும், இனிது தலையளிப்பினும் என் தோழி நின் வரைப்பினள். தன் உறு விழுமம் களைஞர் இலள். 
 
அருஞ்சொற்பொருள்: நனை = அரும்பு; ஞாழல் = புலிநகக் கொன்றை; சினை = மீனின்  முட்டை; மருள் = போன்ற (உவம உருபு); திரள் = உருண்டை; வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக வந்தது.); ஊதை = குளிர்காற்று; உரவு = வலிமை; உரவு நீர் = வலிய நீர் (கடல்); உடன்று = சினந்து; அலைத்தல் = அடித்தல்; அன்னா - அன்னை என்பது திரிந்து அன்னா என்று வந்தது; தலையளி செய்தல் = கருணை காட்டுதல்; வரைப்பு = எல்லை; விழுமம் = துன்பம்.

உரை: அரும்புகள் முதிர்ந்த ஞாழல் மரத்தின், மீனின் முட்டையைப் போன்ற உருண்டையான  மலர்களை, கீழே உள்ள நெய்தலின் கரிய மலர்களின்மேல் பெய்வதைப்போல, குளிர்காற்று வீசி நீர்த்துளிகளைத் தூற்றும் வலிய கடற்கரைத் தலைவ! தாய் சினந்து அடித்தாலும், வாய்திறந்து அம்மா!” என்று அழும் குழந்தையைப் போல, என் தோழியாகிய தலைவி, நீ அவளுக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தாலும், இனிதாக அவளிடம் கருணை காட்டினாலும், அவள் உன்னால்  பாதுக்காக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; அவள் உன்னையன்றித் தனது  துன்பத்தைக் களைபவர்கள் எவரும் இல்லாதவள்.


சிறப்புக் குறிப்புஞாழலின் மலர்கள் கரிய நெய்தல் மலர்களின்மேல் விழுவது, குளிர்காற்று நீர்த்துளிகளை கடலின்மீது தூவுவதுபோல் உள்ளது. தலைவிக்கு குழந்தையும், தலைவனுக்குத் தாயும் உவமைகள்

No comments:

Post a Comment