Sunday, August 13, 2017

380. தோழி கூற்று

380. தோழி கூற்று
பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை.
திணை: பாலை.
கூற்று : பனிப்பருவங் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவவரவின்கண் வேறுபடுவாளாயினும், கதுமென ஆற்றுவிப்பது அரிதுஎன்னும் கருத்தினளாய், கூதிர்ப் பருவத்துத் தலைமகள் கேட்பத் தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் முன்பனிக் காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச்சென்றான். இப்பொழுது குளிர்காலத்தில் இறுதி நாட்கள் வந்துவிட்டன. அடுத்து, முன்பனிக் காலம் வந்தால் தலைவி வருந்துவாளே என்று எண்ணிய தோழி, தலைவியை நோக்கி,  “முன்பனிக் காலம் வரப்போகிறது. தலைவர் நம்மை நினைந்திலர்; நாம் என் செய்வேம்!என்று கூறுகிறாள்.

விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர்
வென்றெறி முரசின் நன்பல முழங்கிப்
பெயலா னாதே வானம் காதலர்
நனிசேய் நாட்டர் நம்முன் னலரே
யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய
வண்ணத் துய்ம்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. 

கொண்டு கூட்டு: தோழி! விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் வென்று எறி முரசின் நன்பல முழங்கிவானம் பெயல் ஆனாது.  காதலர் நனிசேய் நாட்டர். நம் உன்னலர். ஈங்கைய வண்ணத் துய்ம்மலர் உதிரமுன்னர்த் தோன்றும் பனிக்கடு நாள் யாங்குச் செய்வாம் கொல்?

அருஞ்சொற்பொருள்: விசும்பு = ஆகாயம்; பாஅய் = பரவி; ஆனாது = நீங்காது (விடாது பெய்கின்றது); உன்னுதல் = நினைத்தல்; உன்னலர் = நினையார்; ஈங்கை = கூதிர் காலத்தில் (குளிர் காலத்தில்) மலர்ந்து உதிரும் இயல்புடைய ஒருவகை மலர்ச் செடி; துய் = மலரில் உள்ள ஒருவகைக் கொழுந்து.


உரை: தோழி! வானம் மறையும்படி மேகங்கள் பரவின. வேந்தர்கள் பகைவர்களை வென்று அறைகின்ற முரசத்தைப் போல நன்மையையுடைய பல இடி முழக்கங்களும் வானில் எழுந்தன. மழை விடாது பெய்தது. தலைவர் மிகத் தொலைவில் உள்ள நாட்டில் உள்ளார்; அவர் நம்மை நினைத்தாரல்லர்; ஈங்கையில் உள்ள வண்ணத்தையும் துய்யையும்  உடைய மலர்கள் உதிரத் தொடங்கினஇனி வரப்போகும்  கடுமையான  பனிக்காலத்தில் நாம்  என்ன செய்வோம்!

No comments:

Post a Comment