Sunday, August 13, 2017

381. தோழி கூற்று

381. தோழி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது. (இயற்பழித்தல் = தலைவனின் இயல்பைப் பழித்துரைத்தல்)
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப்  பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால், தலைவி, தன் அழகை இழந்து, தோள் மெலிந்து, துன்பத்தோடு, பசலையுற்றுக் காணப்படுகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, “தலைவனோடு கூடி மகிழ்ந்ததின்  பயன், இவ்வாறு வருத்தத்தில் வாடுவதுதானா?” என்று தலைவியிடம் தலைவனைப் பழித்துரைக்கிறாள்.
தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய்
அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது
பசலை யாகி விளிவது கொல்லோ
வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற்
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதருந் துறைவனொ
டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே.

கொண்டு கூட்டு: வெண்குருகு நரலும், தண்கமழ் கானல்பூமலி பொதும்பர் நாள்மலர் மயக்கி விலங்குதிரை உடைதரும் துறைவனொடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயன், தொல்கவின் தொலைந்து, தோள்நலம் சாஅய்அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, பசலையாகி விளிவது கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: கவின் = அழகு; சாஅய் = மெலிய; அல்லல் = துன்பம்; அல்கல் = இரவு; விளிதல் = அழிதல்; நரல் = ஒலி (பறவைகள் தம் துணையைத் தேடி மென்மையாக ஒலிப்பதைக் குறிக்கிறது); கானல் = கடற்கரை; பொதும்பர் = மரம் அடர்ந்த சோலைகள்; நாள்மலர் = அன்று மலர்ந்த மலர்; விலங்குதல் = குறுக்கிடுதல்; இலங்குதல் = விளங்குதல்; நகுதல் = மகிழ்தல்.

உரை: வெண்ணிறமுள்ள நாரைகள் ஒலிக்கின்ற, குளிர்ச்சியும் மணமும் பொருந்திய கடற்கரையிலேயுள்ள, மலர் நிறைந்த சோலையில், அன்று மலர்ந்த மலர்களைக் கலக்கி, குறுக்காக கஓடிவரும் அலைகள்,  உடைந்து செல்கின்ற துறையையுடைய தலைவனோடு, விளங்குகின்ற பற்கள் தோன்றுமாறு சிரித்து மகிழ்ந்ததனால் உண்டான பயன், பழைய அழகு அழிய, தோளின் நலம் மெலிய, துன்பத்தையுடைய நெஞ்சோடு, இரவுதோறும் தூங்காமல், பசலையுற்று, நாம் அழிவதுவோ?

சிறப்புக் குறிப்பு: கடற்கரைச் சோலையில் உள்ள புன்னை முதலிய மரங்கள், அலைகள் தொடும் அளவுக்குத் தாழ்ந்திருந்ததால், அலைகள், குளிர்ச்சியுடன் மணக்கின்ற புதுமலர்களை கலங்கச் செய்தன

No comments:

Post a Comment