Sunday, August 13, 2017

383. தோழி கூற்று

383. தோழி கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்.
திணை: பாலை.
கூற்று : உடன்போக்கு நேர்வித்து வந்த தோழிநாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது. (நேர்வித்து = தலைவனைச் சம்மதிக்கச் செய்து)
கூற்று விளக்கம்: தலைவனோடு உடன்போகத் தலைவி சம்மதித்ததால், தோழி தலைவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னாள். தலைவனும் குறித்த இடத்திற்கு வந்தான். ஆனால், தலைவி நாணத்தால் வருந்தி, தலைவனோடு உடன்போவதற்குத் தயங்குகிறாள். அப்பொழுது, தோழி, “நீ உடன்பட்டதால்தான் நான் தலைவனை வரச் சொன்னேன். இப்பொழுது, நீ இப்படித் தயங்கினால், நான் என்ன செய்வேன்?” என்று கூறுகிறாள்.
நீயுடம் படுதலின் யான்தர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றைக் கென்றி
கையுங் காலும் ஓய்வன அழுங்கத்
தீயுறு தளிரின் நடுங்கி
யாவதும் இலையான் செயற்குரி யதுவே. 
கொண்டு கூட்டு: நீ உடம்படுதலின், யான் தர, குன்ற நாடன்  வந்து குறி நின்றனன். இன்றை அளவை சென்றைக்கஎன்றிகையுங் காலும் ஓய்வன அழுங்க, தீ உறு தளிரின் நடுங்கியான் செயற்குரியது யாவதும் இலை. 

அருஞ்சொற்பொருள்: தருதல் = அழைத்தல் (கூறுதல்); இன்றை அளவை = இன்றைய பொழுது.


உரை: நீ தலைவனோடு உடன்போகச் சம்மதித்ததால் , நான் அழைக்க, மலைநாட்டையுடைய  தலைவன்,  குறித்த இடத்தில் வந்து நின்றான்நீயோ,  இன்றைய பொழுது போகட்டும் என்று கூறுகிறாய். நீ இவ்வாறு காலம் கடத்துவதால், என் கையும் காலும் ஓய்ந்து வருந்தி, நான் நெருப்பில் விழுந்த தளிரைப் போல நடுங்குகிறேன். இனி, நான் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment